Thursday, January 30, 2025

ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா

 ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா

திருப்பலி முன்னுரை

நம் வாழ்வை செம்மையாக்கவும், சீர்படுத்தவும் இறைவனாம் இயேசு கிறிஸ்து, மனிதராய் நம்மிடையே பிறந்தார். சாவின்மேல் வெற்றி கொண்ட இயேசு, இம்மண்ணுலகின் மாந்தர் அனைவருக்கும் விண்ணுலகையை சொந்தமாக்கினார்.

இன்றைய நாளில் நம் தாயாம் திருஅவையானது ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது. மரியாவிடத்தில் மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து, யூதர்களின் வழக்கப்படி கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகின்றார். மேலும், இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ்ந்த சிமியோன் மற்றும் அன்னாவால் புகழப் பெறுகின்றார். இறைவனுக்கு உகந்த வாழ்வை வாழ்ந்ததன் பலனாக இவ்விருவம்,  இரு பெரும் பேற்றை பெற்றனர். நாம் இறைவனை அணுகி சென்று நம்மையே, நம்முடைய இறைவனுக்கு காணிக்கையாக வேண்டும். நம் வாழ்வை, நாம் இறைவனுக்காக அர்ப்பணிக்கும் பொழுது ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்து எண்ணற்ற வரங்களால் நம் வாழ்வை நிரப்பிடுவார் என்ற நம்பிக்கையுடன் இந்த அர்ப்பணிப்பின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் கலந்திடுவோம். 

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர்கள் மூலம் முன்னுரைக்கப்பட்ட மீட்பர் நம்மிடையே தோன்றுவார் என்ற உறுதி தரும் வார்த்தைகளை, உணர்வுகளுடன் கூறுகின்றது இன்றைய முதல் வாசகம். இறைவனால் அனுப்பப்படும் தூதர் வரும் நாளில் எண்ணற்ற அற்புதங்களும், மாட்சிமை பொருந்திய பல நிகழ்வுகளும் நடக்கும் என்று விளக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவனிடமிருந்து வந்த தூதுவராம் இயேசு கிறிஸ்து, நம்மைப் போன்று மனிதனாய் பிறந்து சாவின் மீது வெற்றி கொண்டார். அவர் வான தூதர்களைப் போல் அல்லாமல், நம்மைப் போன்று எளிமையான வாழ்வு வாழ்ந்தார். நம்மைப் போன்றே அவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். எனவே, நம் சோதனை வேளைகளில் நமக்கு துணை நிற்பார் என்ற துணிச்சலை அளிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு ஆர்வமுடன்  செவிக்கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. உலகெங்கும் நற்செய்தியை கொண்டு செல்லும் உம் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உம்முடைய நிறைவான ஆசீர்வாதத்தை பொழிந்தருளும். இயேசுவை அறியாதவர்களுக்கும் இயேசுவை கற்பித்து, இறைவனுடைய மாட்சியையும்,  அவரிடமிருந்து வரும் மீட்பையும் நாங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள தேவையான இறை வரங்களை தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம். வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நேர்மையாளரே எம் இறைவா! எம் தாய் திருநாட்டின் தலைவர்களையும், அதிகாரிகளையும் சிறப்பான முறையில் ஆசீர்வதியும் . நேற்றைய தினத்தில் வெளியிடப்பட்ட நடப்பு ஆண்டிற்கான திட்ட  பட்டியலில், மக்களுக்கு பயன்படும் திட்டங்களை விரைவில் செய்து முடிக்கவும், அனைத்து மக்களுக்கும் ஆன நல உதவிகள் விரைவாக சென்றடைவதற்காக இவர்கள் அனைவரும் உழைக்கவும்,  இவர்களுக்கு தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! இந்த திருவழிப்பாட்டில் பங்கு கொள்ளும் அனைவரின் தேவைகளையும் கண்ணோக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்தருள வேண்டுமென்றும், மேலும் விண்ணக உணவாகிய உம்மை நாங்கள் இறுகப்பற்றிக் கொள்ள வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.

4. நிலைவாழ்வை உடமையாக்க உரிமையளித்த எம் இறைவா! உம் திருமகன் வழியாய் நீர் எமக்களித்த வாழ்வின் வாரத்தைகளை கேட்டு, அவ்வார்த்தையைப் பின்பற்றி பேரசையின் வழியை மறந்து, புதுவழியில் பயணப்பட்டு நிலைவாழ்வை எமதாக்கிக் கொள்ள தேவையான இறைவலிமையை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும் ஆன்மீக வாழ்வில் வளரவும் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.


To download PDF

Wednesday, January 22, 2025

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 26-01-2025

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 

26-01-2025

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 26-01-2025


திருப்பலி முன்னுரை

எளிய இறை நம்பிக்கையின் வாயிலாக ஆன்மீகத்தில் முதிர்ச்சி காண வந்துள்ள சகோதர, சகோதரிகளே! இறைமகன் இயேசு கிறிஸ்து மனிதர்களாகிய நம்மை போல திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கு பெற்ற பின் அலகையின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இறை திருவுளத்தை நிறைவேற்ற  வேண்டுமென்ற பற்றுறுதின் விளைவாக அலகையின் அத்தனை சோதனைகளையும் வென்று, தான் இறைமகன் என்பதை நமக்கு நிருபித்தார். கிறிஸ்துவால் சோதனைகளை வெற்றி கொள்ள முடியுமெனில், அவரின் உடலின் உறுப்புகளாகிய நம்மாலும் நம்முடைய சோதனைகளை எதிர் கொள்ள முடியும். பாவத்தை போக்கி, சாவை அழிப்பதற்காக உலகத்தில் தோன்றிய இயேசு கிறிஸ்து, எளியவர்களுக்கும், பாவ நாட்டத்தால் சிறைப்பட்டோருக்கும் ஆண்டவரின் வாழ்வு தரும் வார்த்தையை அறிவித்தார். ஏழை எளியவர்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தார். இவ்வாறாக தன்னுடைய வாழ்வை பிறருக்கு அளித்ததன் வாயிலாக தன்னை சோதனைகளில் இருந்தும், பாவத்திலிருந்தும் காத்துக் கொண்டார். நாமும் நம்முடைய வாழ்வை நமக்காக வாழாமல், ஏழை எளியவர்களுக்காக வாழும் பொழுது நம்முடைய சோதனைகளிலிருந்தும், பாவங்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள முடியும்.  எளியவர்களுக்கும், சிறைப்பட்டோருக்கும் நாம் நம்முடைய நற்செய்தியை வார்த்தைகளால் அல்லாமல், இயேசுவைப் போல நம் செயல்களால் நற்செய்தி பணியாற்ற தேவையான வரங்களை வேண்டி வாழ்வளிக்கும் இக்கொண்டாட்டத்தில் மகிழ்வுடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பின் எருசலேமுக்கு வந்த மக்கள் நெகேமியா தலைமையில் ஆலயத்தை மீண்டும் கட்டினர். எஸ்ரா திருச்சட்டத்தை புதுப்பித்து, மக்கள் கடைப்பிடிக்க வழிவகுத்தார். ஆண்டவரின் வார்த்தைகள் அவர்களுக்கு வழியாக மாறியதை உணர்ந்து மக்களும் உருக்கமாக அழுதனர். எனவே, ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்துவின் மூலம் ஒரே மக்களினமாக மாறிய நம் அனைவருக்கும் கிறிஸ்துவே தலையாக விளங்குகின்றார். எனவே, இறைமக்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்துவில் பங்கேற்கின்றோம். நாம் அனைவரும் கிறிஸ்வின் உடலோடு இணைந்திருப்பதால் நாம் அனைவருமே கிறிஸ்துவுக்கானவர்கள். நம்மில் ஏற்றத்தாழ்வுகள் இருத்தாலாகாது எனவும், அதற்கான விளக்கத்தையும் அளிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம். 


மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை, கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா! உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து, அளவுக்கு அதிகமான பொருட்களை, சொத்துக்களைச் சேமிக்காமல் எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வழிபாட்டின் நாயகரே எம் இறைவா! நாங்கள் செய்யும் வழிபாடுகள் வெற்றுச் சடங்குளாக அல்லாமல் அர்த்தமுள்ளதாக அமையவும், வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாடிக்கையான ஒரு செயலாக இல்லாமல் பொருளுள்ள வழிபாட்டின் முழுநிறைவையும், நிறைவான வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைக் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதிய சிந்தனைகளோடும், புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலைத் தந்தருன வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறிப்பாக எம் நாட்டின் இறையாண்மைக்கு, மக்களின் ஒற்றுமைக்கு எதிரான சட்ட மாற்றங்கள், விவசாயிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், ஏழை எளியோர் இழைக்கப்படும் அநீதிகள் நீங்கிட உம் இரக்கத்தை எங்கள் மீது பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF

Wednesday, January 15, 2025

பொதுக்காலம் 2 – ஆம் ஞாயிறு 19-01–2025

 பொதுக்காலம் 2 – ஆம் ஞாயிறு 19-01–2025


திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின் அன்பையும், அரவணைப்பையும் அனுபவிக்க இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! அனைத்தையும் படைத்த நம்முடைய இறைவன், நாம் கேட்பதற்கு முன்பே, நம்முடைய தேவைகளை அறிந்து வைத்திருக்கின்றார். நம் தேவைகளை அறிந்து தகுந்த நேரத்தில் அவற்றை நமக்கு தருகின்றார். ஏனெனில், இறைவனின் பிள்ளைகளாகிய நமக்கு, என்ன தேவையென்று நம் தந்தைக்கு மட்டுமே தெரியும். இறைவன் இவ்வுலகைப் படைத்து, அதன் மீது ஆளுகை புரியும்படி மனிதனுக்கு கொடுத்தார். பாவத்தில் வீழ்ந்த மனித குலத்தை மீட்க எண்ணற்ற இறைவாக்கினர்களை அனுப்பினார். இறுதியாக, தன்னுடைய அன்பின் மிகுதியால் தன்னுடைய ஒரே மகனை இவ்வுலகின் பாவம் போக்கும் செம்மறியாக அளித்தார். நம் பாவம் போக்குவதற்காக இவ்வுலகிற்கு மனிதனாக வந்த இறைமகன் நமக்கு தாயும், தந்தையுமாக இருந்து மாற்றம் தரும் பல புதுமைகளை நிகழ்த்தி தம் அன்பையும், ஆசிரையும் நமக்கு வெளிபடுத்துகின்றார். நன்மைகளை வாரி வழங்கும் இறைவனிடம் நம் தேவைகளை எடுத்துரைத்து, தந்தையிடமிருந்து எதிர்நோக்கு கொண்ட பிள்ளைகாய் இந்த அருளடையாள கொண்டாடத்தின் ஆர்வமுடன் பங்கெடுப்போம்.


வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

போர்களாலும், தொடர் பஞ்சத்தாலும் வாட்டமுற்ற மக்களை இறைவன் தாமே தம்முடைய இறைவாக்கினர்கள் வழியாக ஒன்றிணைத்து புதுவாழ்வளிக்கின்றார். இறைவனால் நாம் கைவிப்பட்டோம் என்று கவலையில் கறைந்த மக்களை தன் அமுத மொழியால் இறைவன் தேற்றுகின்றார். கவலையில் இருப்போரை தேற்றுவதற்காய் அமைக்கப்பட்ட இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திருமுழுக்கு பெற்ற அனைவருக்கும் தன்னுடைய பணியை ஆற்றுவதற்கான  அழைப்பையும், திறனையும் இறைவன் அளித்துள்ளார். பணிகளின் பண்புகள் வெவ்வேறு விதமானவையாக இருந்தாலும், நாம் அனைவரும் வாழ்வளிக்கும் ஒரே இறைக்காக பணிபுரிகின்றோம் என்ற உண்மையை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.






மன்றாட்டுகள்

1) அன்பை அடித்தளமாகக் கொண்டு திருஅவையை கட்டி எழுப்பிய எம் அன்பு இறைவா! திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இறையன்பையும், பிறர அன்பையும் எவ்வித குறையும் இன்றி கடைபிடிக்க தேவையான அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள் வேண்டுமென்று உண்மை மன்றாடுகின்றோம்.

2) உலகுக்கு உரு கொடுத்த எம் இறைவா! இவ்வுலகில் மக்களை வழிநடத்தும் அனைத்து தலைவர்களையும் நிறைவாக ஆசீர்வதியும் . இவர்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, மக்கள் மீது உன் அன்பு கொண்டு,  அவர்களை அன்பின் பாதையில் நடத்திட வேண்டிய வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3) ஆதரவற்றோருக்கு ஆதரவே எம் இறைவா! முழுமையான அன்பும், முறையான கவனிப்பும் இன்றி தவிக்கும் அனைத்து முதியோர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் தரவேண்டிய பொறுப்புணர்வை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

4) திருக்குடும்பத்தின் சுடரொளியை எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அன்பு செய்தல், விட்டுக்கொடுத்தல் கீழ்ப்படிதல் போன்ற திருக்குடும்பத்தின் படிப்பினைகளை பின்பற்றவும், அதன் மூலம் எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதி நிலவவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5) அழியும் செல்வமான இம்மன்னக செல்வத்தின் மீது நாட்டம் கொள்ளாமல், நிலையான செல்வமாகிய விண்ணகச் செல்வத்தை உடைமையாக்கி கொள்வதற்கான வழி ஆகிய அன்பை நாங்கள் இறுகி பற்றி கொள்ளவும். பிறர அன்பு பணிகளில் அதிகமாக ஈடுபடவும் வேண்டிய தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To download pdf 


Wednesday, January 8, 2025

ஆண்டவரின் திருமுழுக்கு

ஆண்டவரின் திருமுழுக்கு 




ஆண்டவரின் திருமுழுக்கு

திருப்பலி முன்னுரை

திருமுழுக்கின் வாயிலாக நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு நாம் இறைவனின் மாசற்ற பிள்ளைகளாகின்றோம். நாம் பெற்ற திருமுழுக்கின் வழியாக நாம் தேர்ந்தெடுத்த பாதையான கிறிஸ்துவின் பாதையில் பயணிக்கும் பொழுது கிறிஸ்து அருளும் தூய ஆவியின் திருமுழுக்கை பெறுகின்றோம். மண்ணுலக மாந்தரை பாவத்திலிருந்து மீட்க தோன்றிய இறைமகன், இறைவனின் பாதையில் என்றும் நடக்க திருமுழுக்கின் மூலம் தன் இறைத்தன்மையை உறுதி செய்தார். இதன் அடையாளமாக இறைமகன் இயேசு கிறிஸ்து யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற பொழுது, இறைவனின் தூய ஆவியானவர் புறா வடிவில் இயேசுவின் மீது இறங்கி வந்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்டு, நிலையான பேரின்ப வாழ்விற்கு அழைத்துச் செல்ல வல்ல கிறிஸ்துவின் மீது இறைவன் கொண்ட அன்பை, “என் அன்பார்ந்த மகன் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்ற தன்  அன்பு வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றார்.இறைவன் இயேசுவிற்கு அருளிய அதே தூய ஆவியை நமக்கும் நம்முடைய நம்முடைய திருமுழுக்கின்; பொழுது அளிக்கின்றார். இயேசு தான் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் ஆற்றலால் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து, இறைத்திருவுளத்தை நிறைவேற்றினார். நாமும் நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் வல்லமையால் நம்முள் உள்ள மன அழுக்குகளை அகற்றி இறைவன் காட்டும் அன்பின் பாதையில் என்றென்றும் பயணிப்போம். அந்தப் பயணத்திற்கு தடையாக உள்ளவற்றை, திருமுழுக்கின் வாயிலாக நாம் பெற்றுக் கொண்ட தூய ஆவியின் துணையுடன் வெற்றி கொண்டு இறைவனின் பிள்ளைகள் என்ற உறுதியுடன் இந்த உயர்வின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

ஆயனின் வருகை எதிர்பார்த்து மந்தைகாத்திருப்பது போல, தங்களுக்கு வாழ்வளிக்க வரும் எல்லாம் வல்லவரின் வருகைப் பற்றி விரிவானக் குறிப்புகள் இன்றைய முதல் வாசகத்தில் தரப்பட்டுள்ளது. துவண்டு கிடந்த மக்களினத்திற்கு புதுப்பொலிவளிக்க வல்ல மீட்பரை வரவேற்கும் படி இறைவாக்கினர் எசாயா அவர்கள் இறைவாக்குறைக்கின்றார். எனவே, இறைவனிடமிருந்து வரும் மீட்பையும், மீட்பரையும் நமதாக்குவதற்கான வழிகளைக் கற்பிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மனிதராய் பிறந்த அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவன் அளிக்கும் அருள் வெளிப்படுத்தப்படுகின்றது. மனிதராய் நம்மிடையே பிறந்த இயேசு கிறிஸ்து நம்மை அனைத்து தீமைகளிலிருந்து காத்து, நீதியின் பாதையில் நடத்திடுவார் என்றும், அவர் வாழியாக நாம் வாழ்வு தரும் தூய ஆவியின் திருமுழுக்கை பெறகின்றோம் என்ற இறைப்படிப்பினைகளை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. இயேசுவின் பெயரால் திருமுழக்கு பெற்று, இறைச் சமுகமாய் ஒன்று கூடி வாழும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் இயேசு காட்டிய அன்பின் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், நாங்கள் பெற்ற திருமுழக்கின் உன்னதத்தை உணர்ந்து, தூய ஆவியின் வாழிகாட்டுதல்களின் படி எங்கள் வாழ்வை சீரமைக்க வேண்டிய அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. உண்மையை உலகுக்கு அளிக்க வந்த எம் அன்பு இறைவா! கடமை, கண்ணியம் தவறாது உழைக்கும் அனைத்து தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். எந்த சூழலிலும் கடமை தவறாது உழைக்கும் உண்மையானவர்களுக்கு, உண்மையின் வழியில் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலையும், உண்மையின் வழியில் செல்லாதோர்க்கு தகுந்த ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எஙகள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! கடும் நோய்களாலும், தீராத மன உளைச்சலாலும் அல்லல்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். விண்ணகத்திலிருந்த மண்ணகத்திற்கு இறங்கி வந்த மண்ணக உணவாகிய நீரே, அவர்களுக்கு ஆறுதலாக இருந்து நலமளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. விண்ணக உணவாக மண்ணகம் வந்த எம் இறைவா! அன்றாட உணவில்லாமல் வீடுகளிலும், வீதிகளிலும் வசிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு ஆன்மா உணவையும், அன்றாட உணவையும் அளிக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. ஞானத்தை வாரி வழங்கிய எம் அன்பு இறைவா! கிறிஸ்துவை மையமாகக் கொண்டு சிறிய திருஅவையாக கூடி செபிக்கும் நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்றவாறு எங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவும், எம் பங்கு பணியில் பணிபுரியும் இறைப் பணியாளர்களும், இறைமக்களும் ஆன்ம வாழ்வில் மென்மேலும் வளர அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

    To download PDF

Friday, January 3, 2025

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா


ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா 

திருப்பலி முன்னுரை

விண்ணகத்திலிருந்து மண்ணகம் இறங்கி வந்த இயேசு பாலனி ஆசீர், எளிமையான இறை நம்பிக்கையை கொண்ட இடையர்களுக்களுக்கும், ஆழமான ஞானத்தை பெற்ற ஞானிகளுக்கும் நிறைவாக வழங்கப்பட்டது. ஏனெனில், இவர்கள் இருவருமே இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு, இறைவனின் ஆசிரியரை வேண்டினர். இதனால் இறைவன் அருளிய ஆசீர் அவர்களுக்கு நிறைவாக கிடைத்தது. மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு பாலன்,  இடையர்கள் மற்றும் ஞானிகளின் உள்ளத்திலும் பிறந்தார். அதன் விளைவாக இடையர்கள் ஆர்ப்பரித்தார்கள், ஞானிகள் காணிக்கைகளை கொண்டு வந்தார்கள். வானதூதரும், வான் நட்சத்திரமும் இயேசு பாலனை காண இடையர்களுக்கும் ஞானிகளுக்கும் அழைப்பு அளித்தது போல நமக்கும் இன்றைய திருவழிபாட்டின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுகின்றது. இயேசுவை காண வந்த மூன்று ஞானிகளுக்கு இவ்வுலகில் தாங்களிடத்தில் இருந்த சிறந்தவைகளை இறைவனுக்கு காணிக்கையாக அளித்தனர். நாம் எதை இத்திரு வழிபாட்டின் வாயிலாக இறைவனுக்கு அளிக்கயிருக்கின்றோம் என்று சிந்திப்போம். நீங்கள் குழந்தையாய் மாறாவிடில்,  விண்ணரசிற்குள் புக முடியாது என்று மொழிந்த இயேசுவே நம்மிடத்தில் குழந்தையாக பிறந்துள்ளார். அக்குழந்தைக்கு போட்டி, பொறாமை அற்ற எளிய குழந்தை உள்ளத்தை பரிசாக அளிப்போம். கடினப்பட்ட நம் உள்ளத்தை கள்ளமில்லாத ஒன்றாக மாற்ற இந்த கொண்டாட்டத்தின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பல்வேறு துன்பங்களினால் அவதியுற்ற இவ்வுலக மக்களுக்கு ஒளியை வழங்க இறைவனே மனிதனாக பிறந்தார். வாட்டமுற்ற மக்களின் மனதை இறைமகனின் பிறப்பின் முன்னறிவிப்பு செய்தி மூலம் இறைவாக்கினர் எசாயா வளமடையச் செய்கின்றார். இறைவனின் பிரதிநிதி அவர் கூறும் ஆசிர்வாத மொழிகளை உள்ளடக்கிய இம்முதல் வாசகத்திற்கு அவலுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

அறிவில் மிகுந்த எத்தனையொ ஞானிகளுக்கும், இறைவாக்கினர்களுக்கும் கிடைக்க அரிய பெரும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இறைப்பண்பை கொண்ட இறைவன் மனிதராய் பிறந்ததன் மூலம் நம்மை அவருடைய உடன் பங்காளியக மாற்றுகின்றார். எளியவர்களாகிய நமக்கு அளிக்கப்பட்ட இந்த இறைவெளிப்பாடு எத்தனை மதிப்புமிக்கது என்று விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்

மன்றாட்டுகள்

  1. எளியவர்களைத் தேடிச் செல்லும் எம் அன்பு இறைவா! விளிம்பு நிலை மக்களை தேடிச் சென்று தேற்றும் உன் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இயேசு பாலனின் பிறப்பால் மகிழும் நாங்கள் அனைவரும் இயலாதவர்களுக்காக நாங்கள் செய்யும் சேவைகளை மென்மேலும் சிறப்பாக ஆற்றிட தேவையான உதவிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளிலும், மக்களுக்கு உபயோகமற்ற திட்டங்களிலும் எம் நாட்டுத் தலைவர்கள் பணத்தை வீணடிக்காமல், தொலைநோக்குடைய நல்ல திட்டங்களை தீட்டி, மக்களின் வாழ்வை உயரச் செய்ய தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நொருங்கிய உள்ளத்தை பலியாக கேட்ட எம் இறைவா! பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, செருக்கு, போன்ற உள்ள அழக்குகளை அகற்றி, எங்கள் இல்லங்களை நாங்கள் அலங்கரிப்பது போல, எங்கள் உள்ளங்களையும் அலங்கரித்து ஞானிகள் தங்களிடத்தில் இருந்தவற்றில் சிறந்ததை உமக்கு அளித்தது போல, நாங்களும் எம்மையே உமக்கு காணிக்கையாக்கும் மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. வார்த்தைக்கு வாழ்வளிக்கும் எம் இறைவா! இறைஞானம் பெற இறைப்பிடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும், பிறரன்பு பகிர்வில் வெறும் சொல் வீரர்களாய் மட்டும் இல்லாமல், செயல் வீரர்களாய் இருந்து, பிறரன்பு பணியில் ஈடுபட்டு இறைஞானத்தை எமதாக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. குழந்தைகளை விரும்பிய எம் அன்பு இறைவா! தலைமுறை இடைவெளியாலும், தகவல் தொழில் நுட்ப கருவிகளாலும் கட்டுண்டு தவிக்கும் எம் குழந்தைகளுக்கு, இறையரசின் மேன்மைகளை உணர்த்தும், நல்ல பண்புகனை கொண்ட வழிகாட்டிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

    To download PDF

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...