Thursday, June 20, 2024

பொதுக்காலம் 12- ஆம் ஞாயிறு (24-06-2024)

 

பொதுக்காலம் 12- ஆம் ஞாயிறு (24-06-2024)




திருப்பலி முன்னுரை

இறை உறவில் ஒன்றிணைந்த சகோதர, சகோதரிகளே !

இறைமகன் இயேசு கிறிஸ்து இம்மண்ணில் விட்டுச் சென்ற நம்பிக்கையின் விதையை, நாள்தோறும் வளர்த்தெடுக்கும் நம் தாயாம் திருஅவையானது பொதுக்காலத்தின் 12-ஆம் ஞாயிறை சிறப்பிக்க நமக்கு அழைப்பு விடுகின்றது. இறைவனை பற்றி நாம் அறிவதற்கு, இறை அனுபவம் இன்றியமையாது. அப்படிப்பட்ட இறை அனுபவத்தை நாம் நம்முடைய நம்பிக்கையின் வழியாக மட்டுமே அடைய முடியும்.

இன்றைய வாசகங்கள் இறைமகன் இயேசுவிற்கு படைப்புகளின் மீது உள்ள அதிகாரத்தைய பற்றியும், இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் எடுத்துரைக்கின்றது. நூம இவ்வுலகில் பட்டங்களையும், பதவிகளையும் நம்முடைய கடின உழைப்பின் பலனாக பெற முடியும். ஆனால், இறை அனுபவத்தை நாம் இறைவனிடத்தில் கொண்டுள்ள இறை நம்பிக்கையின் வழியாகவே பெற முடியும்.

இறைமகன் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய மனித பண்பையும், இறைப் பண்பையும் பல வழிகளில் வெளிப்படுத்தினார். பெற்றோருக்கு கீழ்படிவதன் மூலமும், கடினமாக உழைப்பதன் மூலமும் தன்னுடைய மனிதப் பண்பை வெளிப்படுத்தினார். இறை வேண்டல்கள் மூலமும், அரும் அடையாளங்கள் மூலமும் தன்னுடைய இறை பண்பை வெளிப்படுத்தினார். இப்படி அவர் தன்னுடைய பண்பை வெளிப்படுத்துவதற்கான அடிப்படை காரணம் நம்முடைய நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காகதான். அனைத்திற்கும் மேலாக, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இறப்பின் மூலம் தன்னுடைய மனித பண்பையும், உயிர்ப்பின் மூலம் தன்னுடைய இறை பண்பையும் வெளிப்படுத்திய இயேசு திருப்பலியின் வழியாக ஒவ்வொரு நாளும் நம்மை இறை அனுபவம் பெற அழைக்கின்றார்.

எண்ணற்ற அரும் அடையாளங்களை கண்டும், இயேசுவின் போதனைகளை கேட்டும், இயேசுவின் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையாலும் இறைய அனுபவம் பெற்று இறை ஆர்வம் கொண்ட இயேசுவின் சீடர்கள், இயேசுவின் படிப்பினைகளுக்கு ஏற்றவாறு வாழ்ந்தனர். திருப்பலியில் பங்கேற்று இயேசு செய்த ஆரும் அடையாளங்களையும், இயேசுவின் இறப்பு, பாடுகள் மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றை நினைவு கூறும் நாம் இயேசுவின் சீடர்களைப் போன்று இறை நம்பிக்கையில் வலுப்பெற்று இறை அனுபவம் பெற இறையாசீர் வேண்டுவோம். இயேசு செய்த அரும் அடையாளங்கள், சீடர்களின் வாழ்வை மாறியது போல, நாம் பங்கேற்கும் ஒவ்வொரு திருப்பலியிலும் இறை அனுபவத்தையும், இறை நம்பிக்கையும் பெற்று நம்முடைய வாழ்வில் மாற்றம் காண இத்தெய்வீக திருப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.


வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைவனின் மீதான நம்பிக்கையை நாம் வெளிப்படுத்துவதற்கு, இன்பமான சூழ்நிலைகளை விட துன்பமான சூழ்நிலையே ஏற்றதாகும், நாம் வளமையுடனும் வலிமையுடன் இருக்கும் பொழுது கடவுளைப் புகழ்ந்து இறை நம்பிக்கையில் திளைப்பது ஒன்றும் பெரிதல்ல, துன்ப வேளையிலும் தளராது இறைவனை நேசிப்பவர்களே உண்மையான இறை நம்பிக்கையாளர்கள். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் விவிலிய கதாபாத்திரமான யோபு, இந்த யோபுவின் புலம்பல்களுக்கு இறைவன் அளிக்கும் பதிலை இம்முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு இறந்தோர் அனைவரும் கிறிஸ்துவின் மாட்சியால் மீண்டும் கிறிஸ்துவை போல உயிர் பெறுவர். மண்ணுலக வாழ்வில் இயேசு கிறிஸ்துவை நம்பி, இயேசு கிறிஸ்துவின் விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றுபவர்கள், இயேசு கிறிஸ்துவை போல மேலானவர்களாக மாறுவார்கள் என்பதனையும், பழையன விடுத்து புது வாழ்வு பெறுவார்கள் என்பதையும் விளக்கும் பவுல் அடிகளாரின் வார்த்தைகளுக்கு கவனமுடன் செவி கொடுப்போம்.


மன்றாட்டுகள்

1.   அன்பை அடிப்படையாகக் கொண்டு திரு அவையை ஏற்படுத்திய என் அன்பு இறைவா! இயற்கையின் பருவநிலை மாற்றத்தாலும், நாடுகளுக்கிடையேயான போர்களாலும் உருக்குலைந்துள்ள இவ்வுலகை அன்பின் மூலம் கட்டி எழுப்பும் திரு அவையின் உறுப்பினர்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இறைமகன் இயேசு கிறிஸ்துவின்பால் நம்பிக்கை பெற்ற இவர்கள் அனைவரும் . இயேசுவைப் போல இவ்வுலகில் அன்பையும், அமைதியையும் நிலைநாட்டிட தேவையான இறை வலிமையை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்


2.   வழிநடத்துபவரே எம் இறைவா! உலகமயமாக்கல் மற்றும்  தனியார்மயமாதல் போன்ற கொள்கைகளால் அல்லலுரும் நாடுகளையும் அதன் தலைவர்களையும் சிறப்பான முறையில் வழிநடத்தி, நாட்டு மக்களின் நலனை தன்னலனாக கொண்டு, மக்களுக்கு தேவையான சிறந்த திட்டங்களையும், மக்களையும் நாட்டையும் நல்வழியில் நடத்திட தேவையான தொலைநோக்கு பார்வை கொண்ட சிந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு, பிற நாடுகளை நசுக்காமல் தன்னுடைய நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் உழைக்கும் நல்ல மனதையும் அதற்கு தேவையான ஆற்றலையும் தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

 3.படைப்பின் ஆதாரமே எம்  இறைவா! இயற்கை என்பது இறைவன் மனிதருக்கு அளித்த கொடை என்பதை நாங்கள் உணர்ந்து, எங்களுக்கு அளிக்கப்பட்ட  அக்கொடையை நன்முறையில் பாதுகாக்கவும், அதனை பராமரிக்கவும் தேவையான அறிவை எங்களுக்கு தந்தருளும், மேலும் படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கும் உலகின் வெப்பநிலையை கட்டுக்குள் கொண்டு வரவும், அதனால் ஏற்படும் ஆபத்தினை உணர்த்து இயற்கையுடன் இணைந்து வாழும் ஞானத்தை மனிதர்களாகிய எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உண்மை மன்றாடுகின்றோம்.

    4.திருக்குடும்பத்தை நிறைவு செய்த எம் இறைவா!  திருக்குடும்பத்தை இவ்வுலகில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு குடும்பத்தையும் நிறைவாக ஆசிர்வதியும். அன்பு,  நம்பிக்கை, தெய்வ பயம் ஆகிய இறை மதிப்பீடுகள் கொண்ட குடும்பங்களாக எங்கள் குடும்பங்கள் உருவாகிடவும், உன்னத குடும்பங்களை கொண்ட நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிடவும் , அதனால் எம் பங்கு மக்களின் வாழ்வு இறைநம்பிக்கையிலும், பொருளாதாரத்திலும் பன்மடங்கு மேம்பட தேவையான இறை ஒளியைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 5.தொடர் போர்களாலும், பேரிடர்களாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் உம்முடைய பிள்ளைகளாக கருதி அவர்களுக்கு நீரே அடைக்கலம் அளிக்க வேண்டுமென்றும், எண்ணற்ற உயிர்களை பறிக்கும் மதவாதம், இனவாதம் மற்றும் சாதியவாதம் போன்ற சமூக தீங்குகளை அடியுடன் வேரருக்கு தேவையான பகுத்தறிவு சிந்தனையை தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.


By

SELVA ARASU



LEAVE YOUR COMMENTS !

THANK YOU FOR VISITING !

No comments:

Post a Comment

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...