தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
✦ திருப்பலி முன்னுரை
இறைவனில் தாகம் கொண்டு இவ்விறைப்பிடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! இவ்வுலக மக்களின் தாகம் தீர்ப்பவராக நம் இறைவன் திகழ்கின்றார் என்ற மைய கருத்தினை சிந்திக்க தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இன்றைய வாசகங்கள், இறைவனில் நம்பிக்கை கொண்டு நிலை வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு மட்டுமே அந்நிலை வாழ்வு சொந்தமாகும் என்று ஆழமாக வலியுறுத்துகின்றன. பாவத்தின் மீது வேட்கை கொண்ட மனிதர்களாகிய நாம் இவ்வுலகச் செல்வங்களின் மீது நாட்டம் கொண்டு, நம்முடைய ஆன்ம தாகத்திற்கான மருந்தை பொருள் செல்வங்களில் தேடுகின்றோம். ஆனால் உண்மையில் நம்முடைய ஆன்ம தாகத்தை போக்க வல்ல அருமருந்து நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்பதை நாம் மறந்து விடுகின்றோம்.
எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற இஸ்ரேயல் மக்கள், ஆண்டவரின் அருள் செயல்களை தங்கள் கண் முன் கண்டும் தங்களுடைய தாகத்திற்கான ஆதாரத்தை இவ்வுலக முறைப்படி மன்றாடினார். இதன் காரணமாகவே, நிலை வாழ்வை அளிக்க வந்த இயேசு கிறிஸ்துவை அவர்கள் மீட்பர் என கண்டு கொள்ள இயலாமல் போனது. கிறிஸ்துவே, இவ்வுலகின் மீட்பர் என்று அறிக்கையிட்டு. திருமுழக்கின் வழியாக கிறிஸ்துவுடன் இணைக்கப் பெற்ற நாம் அனைவரும், கிறிஸ்துவை வாழ்வின் மையமாக கொண்டு, இறைவனின் நிலையான அமைதியில் என்றென்றும் மகிழ்ந்திட தேவையான வரங்களை வேண்டி இத்தாகம் தீர்க்கும் இறைபகிர்வில் பக்தியுடன் கலந்துகொள்வோம்.
✦ வாசக முன்னுரைகள்
இன்றைய முதல் வாசகம், பாலைநிலத்தில் தாகத்தால் துன்புற்ற இஸ்ரயேல் மக்களின் அழுகுரலையும், அவர்களின் உலக வேட்கையையும், அவர்களிடம் இறைவன் காட்டிய அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. தாகத்தால் இறைவனைச் சோதித்த மக்களின் மனித பலவீனத்தையும், அதே சமயம் அவர்கள்மீது இறைவன் பொழிந்த அளவற்ற கருணையையும் இந்த வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. நம் வாழ்க்கையில் வறட்சி நிறைந்த தருணங்களில் இறைவன் விட்டு விலகி இவ்வுலக மாயைகளின் மீது விருப்பம் கொள்ளதே! என்ற வாழ்க்கை பாடத்தை கற்று தரும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர், ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.
இன்றைய இரண்டாம் வாசகம், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்து, நம்மீது அளவற்ற அன்பை வெளிப்படுத்தியதை எடுத்துரைக்கிறது. எனவே, நம்முடைய இன்பத்திற்காக இறைவனை மறுத்தலிக்காமல் கிறிஸ்துவின் வழியாக இறைவனுடன் நல்லுறவு பேண வேண்டும். எனெனில், நமக்கு நிலையான மகிழ்ச்சி அளிக்க வல்லவர் நம்முடைய இறைவனே! எனவே, உயிருள்ள இறைவனில் என்றென்றும் நம்பிக்கை கொள்ள அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
நற்செய்திக்கு முன் வசனம் யோவா 4: 42, 15 : ஆண்டவரே, நீர் உண்மையிலே உலகின் மீட்பர்; நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.
✦ மன்றாட்டுகள்
- இறைப் படிப்பினைகளை மையமாகக் கொண்டு திரு அவையை நிறுவிய எம் இறைவா! எம் திரு அவையின் உறுப்பினர்கள் அனைவரும் இவ்வுலகச் செல்வத்தை தவிர்த்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து காட்டிய நிலை வாழ்வின் பாதையில் என்றென்றும் பயணித்து, கிறிஸ்துவின் வழியாக நீர் எமக்கு வாக்களித்த நிலையான பேரின்பத்தை அடைந்திட தேவையான வரங்களை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.
- அமைதியை அளிக்க வல்ல இறைவா! இறைவனின் பெயராலும், பழமைவாத சிந்தனைகளாலும் சிதறுண்டு போர் சூழலில் சிக்கி தவிக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்காக மன்றாடுகின்றோம். போரில் ஈடுபட்டு அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடும் இவர்களுடைய உள்ளங்களில் தோன்றி, போர்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றும் அங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான உதவிகளை செய்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்
- உண்மை செல்வத்தை உலகிற்கு அளிக்க வந்த எம் இறைவா! எங்களின் வாழ்க்கையையும், நேரத்தையும் சமூக ஊடகங்களிலும் கேளிக்கை பேச்சுகளிலும் செலவிடாமல், இறைவன் அளித்த அறிவினைப் பயன்படுத்தி இறைவேண்டல், படிப்பு மற்றும் உழைப்பு போன்ற உண்மையின் வழிகளின் மூலம்; வாழ்வில் முன்னேற்றம் அடைந்திட தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
- வாழ்வின் நீரூற்றே என் இறைவா! மக்களின்; தேவைகளை நன்குணர்ந்த நல்ல தலைமை பண்புகளைக் கொண்ட தலைவர்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். அதிலும் குறிப்பாக எம் நாட்டின் நாளைய தூண்களாகிய இளைஞர், இளம் பெண்கள் தங்களுக்கான தலைவரை தங்கள் பகுத்தறிவின் துணை கொண்டு தேர்ந்தெடுத்திட தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
- வாழ்வளிப்பவரே என் இறைவா! இத்து திருவழிபாட்டில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுகின்றோம். ஆன்ம மாற்றத்தை எதிர்பார்த்து இறைவனை நாடி வந்துள்ள நாங்கள் அனைவரும் எங்களுடைய உலக கவலைகளை மறந்து, உள்ள கவலைகளை இறைவனின் பாதம் சமர்ப்பிக்கின்றோம். நாங்கள் ஆன்மீகப் பாதையில் தொடர்ந்து பயணித்து இறைவனில் என்றும் நல்லுறவு பேண தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Lent 3rd week introduction | Iraivelicham Mass Introduction | Sunday 6th Week Mass Introduction |தவக்காலம் மூன்றாம் ஞாயிறு | திருப்பலி முன்னுரை | இறை வெளிச்சம்

No comments:
Post a Comment