இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Monday, December 29, 2025

Thanksgiving New Year Prayer

நள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு

📅 டிசம்பர் 31, 2025


முன்னுரை

இயேசு பாலனின் ஆசிரைப் பெற்ற சகோதர, சகோதரிகளே! கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த அளவிட முடியாத நன்மைகளை நினைவு கூர்ந்து இறைவனுக்கு உளமாற நன்றி சொல்ல வேண்டிய தருணமிது.

மேலும், கடந்த ஆண்டு முழுவதும் இறைவனுக்கும், நம் சகோதர சகோதரிகளுக்கும் எதிராக செய்த பாவங்களை எண்ணி இறைவனிடம் மன்னிப்பு வேண்டவும், வருங்காலம் நம் வாழ்வின் வளம் கொழிக்கும் வருடமாக மாறிட அருள் வேண்டி இந்த நன்றியின் வழிபாட்டில் நாம் அனைவரும் பக்தியோடு பங்கெடுப்போம்.

📖 நற்கருணை காட்சிபடுத்தியதற்கு பின்

நிலையான புகழுக்குரிய – 3 முறை

பாடல் 1 – ஏதேனும் பொருத்தமான ஆராதனைப் பாடல்

பாவ மன்னிப்பு வழிபாடு

நன்றியின் வழிபாட்டில் முழு தகுதியுடன் பங்கேற்க, பாவ மன்னிப்பு வழிபாட்டுடன் நம்முடைய செபத்தை தொடங்குவோம்.

📜 விவிலிய வாசகம் (1 யோவான் 1:5–10)

கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்;;து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.

ஆண்டவர் உங்களோடு இருப்பராக

நம்முடைய பாவங்களை நினைவு கூர்ந்து, மனம் வருந்தி இந்தப் பாடலை ஒன்றாகப் பாடி மன்னிப்பு வேண்டுவோம்.

🎵 நன்றி பாடல் : மன்னிப்பாயா மன்னிப்பாயா / வேறு மன்னிப்பு பாடல்

நன்றி வழிபாடு

“ஆண்டவர் வழங்கிய நீதிக்காகவும், நன்மைகளுக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவோம்” (திபா 7:17). இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள், தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள் (திபா 30:4) என்று திருவிவிலியத்தின் வாசகங்கள் இறைவனை நன்றியின் மிகுதியால் புகழந்து பாட அழைக்கின்றது.

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே, இறைவன் கடந்த ஆண்டு முழுவதும் நேரடியாகவும், பிறர் மூலமாகவும் இறைவன் நமக்கு செய்த அனைத்து நன்மைகளும் நம் நினைவுக்கு கொண்டு வரவும். நாம் மேற்கொண்ட புதிய முயற்சிகளிலும், கடந்த காலத்தின் தொடர்ச்சிகளை சரியான முறையில் மேற்கொள்ள பலமளித்து, வளமளித்த இறைவனை போற்றிப் பாடுவோம்.

நன்றியின் கனிகளை சுவைத்த நாம் நம்முடைய அன்பின் காணிக்கையை நம்முடைய நன்றி மன்றாட்டுகளால் இறைவனிடத்தில் காணிக்கையாக்குவோம்.

குழு செபம்

நன்றியின் நிறைவில் புனித தாமஸ் அக்குவினாஸ் இறைவனை புகழ்ந்த இவ்வார்த்தைகளை ஒன்றாக செர்ந்து செபிப்போம்.

அன்பான தந்தையே, எல்லாம் செய்ய வல்ல, என்றும் வாழும் எம் இறைவா! உமது மகனாகிய நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும், இரத்தமும் வழியாக பாவியான என்னை ஆசிர்வதிக்க நீர் விரும்பியதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

இந்த அருளாசீர், நான் செய்த எந்த நல்ல செயல்களாலோ எனக்குள்ள தகுதியாலோ கிடைத்தது அல்ல. உம்முடைய அளவற்ற அன்பும் கருணையும் வழியாக நான் பெற்ற பெரும் ஆருளுக்கு இறைவா உமக்கு நன்றி – ஆமேன்

(விருப்பமான நன்றிப்பாடல்)

நன்றி மன்றாட்டுகள்

பதில் : நன்மையின் இறைவனுக்கு, நன்றி பாடி மகிழ்ந்திடுவோம்.

எல்லையில்லா வரங்களைப் பொழியும் எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் உம்முடைய அன்பின் கருணையால் காத்து வந்த உம்முடைய கருணைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எங்களுடைய வாழ்வில் நாங்கள் பெற்ற அனைத்து வளங்களுக்காகவும், வலிகளுக்காகவும் நன்றி செலுத்துகின்றோம். எங்களுடைய கடந்த ஆண்டின் ஒவ்வொரு நொடியிலும் எம்மோடு இருந்து எம் வாழ்வை வளப்படுத்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

அன்பின் இறைவா! எனக்கு நல்ல பெற்றோரையும், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் கொடுத்து குடும்பத்தில் சமாதானம், ஒற்றுமை, மகிழ்ச்சி என கொடுத்து வருகின்றீர் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்;. அன்பின் இறைவா! எனக்கு நல்ல கணவரை, பண்புள்ள மனைவியை, பாசமுள்ள பிள்ளைகளை கொடுத்து நல்வருமானமும் கொடுத்து காத்துவரும் உம் அருளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

கடந்த ஆண்டு முழுவதும் நல்ல மழையினை கொடுத்து, விளைச்சலைப் பெருக்கி கொடுத்தமைக்காகவும், பல்வேறு விபத்துகள், இயற்கை சீற்றங்கள். பேரிடர்கள் ஆபத்துகளினின்று காத்த உமது நலனுக்காய் நன்றி செலுத்துகிறோம்.

ஆன்மீக வழி நடத்த நல்ல அருட்தந்தையையும், அருட்சகோதரிகளையும் கொடுத்ததோடு அல்லாமல் எல்லாவற்றிற்கும் மேலாக உன் அன்பின் மிகுதியால் அன்றாட திருப்பலியில் உடலாகவும், இரத்தமாகவும் எழுந்து, திருவிருந்தளிக்கும் உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம்.

எதிர்நோக்கின் பயணிகளாக கடந்த ஆண்டு முழுவதும் நம்முடைய ஆன்மீக முயற்சிகளை ஆசிர்வதித்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். கடந்த ஆண்டில் நம்முடைய வாழ்வில் நடைபெற்ற ஆன்மீக வளர்ச்சிக்காக நன்றி செலுத்துகின்றோம்.

(இறைவனிடத்தில் நம் நம்பிக்கை வெளிப்படுத்திய நன்றியுணர்வோடு, நற்கருணை ஆசிரை பெற தயாராகுவோம்)

✝️ நற்கருணை ஆசீர் ✝️

Friday, December 19, 2025

Advent 4th Week Mass Introduciton

திருவருகைக்கால நான்காம் ஞாயிறு

21 – 12 – 2025

இம்மானுவேல் – கடவுள் நம்மோடு | திருவருகைக்காலம்

“இம்மானுவேல் – கடவுள் நம்மோடு” ✨

✦ திருப்பலி முன்னுரை

மீட்பரின் வருகையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் சகோதர, சகோதரிகளே! கிறிஸ்துவின் போதனைகளில் தனிச்சிறப்பிடம் பெற்ற அன்பு என்ற இறைக் கொடையைப் பற்றிக் சிந்திக்க இத்திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு நம்மை அன்புடன் அழைக்கின்றது. இறைவன் மனிதனை அன்பு செய்கின்றார். தம் அன்பின் அடையளமாக மனிதர்களைப் படைத்து காத்து வருகின்றார். அதற்கு, கைமாறாக, இறைவன் நம்மிடமிருந்து பாவமற்ற வாழ்வை பரிசாக கேட்கின்றார்.

இந்த பாவமற்ற வாழ்வை எப்படி வாழ்வது என்றும், மாசில்லா இதயத்தை எப்படி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கிறிஸ்து தம் அன்பின் போதனைகள் மூலம் நமக்கு கற்பித்துள்ளார். கிறிஸ்துவின் கட்டளையை ஏற்று அதன்படி வாழ்வோம் எனில் நம்மிடையே அன்பு என்றென்றும் நிலைப் பெற்றிருக்கும். மேலும். கடவுள் அன்பின் வடிவில் என்றும் நம்முடன் வாழ்வார் என்ற மறை உண்மைகளை இன்றைய வாசகங்களும் எடுத்துரைக்கின்றன. எனவே, கிறிஸ்து பிறப்பிற்காக நம்மைத் தாயாரிக்கும் இந்நாட்களில் கிறிஸ்து பிறப்பிற்கான நோக்கத்தை குறையின்றி கற்றறிவோம்.

நம்மோடு என்றும் இருப்பதற்காக நம்மிடையே தோன்றிய ‘இம்மானுவேல்’, இறைவனையும் நம் அயலாரையும் அன்பு செய்ய வேண்டும் என்று கற்பித்தார். அந்த அன்பின் பொன்மொழிகளை நம்முடைய வாழ்வாக்கி, அன்பின் வடிவாய் நம்முடன் என்றும் இருக்கும் கடவுளை உணரும் வரம் வேண்டி இந்த அன்பின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுத்து, இறைவனின் அன்பின் பிள்ளைகளாக மாறுவோம். இறைவனில் ஒளிர்ந்திடுவோம்.

இம்மானுவேல் – கடவுள் நம்மோடு | திருவருகைக்காலம்

“இம்மானுவேல் – கடவுள் நம்மோடு” ✨

✦ கிறிஸ்துமல் ரீத் முன்னுரை – அன்பு

கடவுளுக்கும் மனிதருக்குமான அன்பின் உறவென்பது எதிர்பார்ப்புகளால் நிறைந்து அல்ல. உண்மையில், நம்முடைய அன்பு என்பது பிரதிபலனற்ற நம்முடைய தியாகச் செயல்களின் மூலமே வெளிப்படுகின்றது. இறைவன் தன்னுடைய அன்பின் அடையாளமாக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தன்னையே நமக்காக தியாகம் செய்தார். இயேசு பாலனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் நாமும் நம்முடைய இறையன்பையும், பிறரன்பையும் நம்முடைய தியாகச் செயல்களால் அணி சேர்க்க வேண்டும். நம்முடைய பகிர்வின் செயல்களை, நம்முடைய சுய வளர்ச்சியை இவ்வுலகிற்கு முரசறைக்கும் அயுதமாக பயன்படுத்தாமல், பிறரின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைத்து, அன்பினால் இவ்வுலகை கட்டியெழுப்புவோம் என்ற உறுதியுடன் இந்நான்காம் திரியை எற்றி இறைவனின் அன்பில் சரணடைவோம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசகம் (எசாயா 7:10–14):
கடவுள் நம்முடைய அன்றாட வாழ்வில் நிகழத்தும் அற்புதற்களை நாம் கண்ணோக்க வேண்டும். நம்முடைய தேவைகளை நம்மைவிட நன்கறிந்த இறைவனை சோதித்தல் ஆகாது என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகள் நம்முடைய நம்பிக்கை அளவிட அழைக்கின்றது. எவ்வித ஐயமும் இன்றி பிறக்கவிருக்கும் மீட்பரை வரவேற்க அழைக்கும் இம்முதல் வாசகத்திற்கு நம்பிக்கையுடன் செவிகொடுப்போம்..

இரண்டாம் வாசகம் (உரோமையர் 1:1–7):
உலகையே தங்கள் அளுகைக்கு உட்படுத்தியதாக கருதிய உரோமையர்களின் மத்தியில் இயேசுவின் மீது அன்பு கொண்டவர்களுக்காக பவுல் எழுதிய வார்த்தைகள் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொடுக்கப்பட்டுள்ளுது. பாவத்திலிருந்து நம்மை மீட்க வல்ல, நற்செய்தியை அறிவிப்பதற்கு நம்மிடையே தோன்றவிருக்கும் மீட்பரைப் பற்றி எடுத்துரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. பூரண அன்பை பொழியும் எம் இறைவா! உம் அன்பின் போதனைகளை உலகெங்கும் கொண்டு சென்றிட நீர் ஏற்படுத்திய உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், உம்முடைய பிறப்பிற்காக எங்களை தயார் செய்து, எங்களிடம் உள்ள உயர்ந்த பண்புகளை பிறருக்கு உகந்த வகையில் பயன்படுத்திட தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பின் ஆழத்தை எங்களுக்கு காட்டிய எம் இறைவா! எங்களிடத்தில் உள்ள அன்பின் பகிர்வுகள் வெறும் வார்த்தை அளவில் மட்டுமில்லாமல், எங்களுடைய செயலகளின் வாயிலாக வெளிப்படவும், உம்மையே நாங்கள் முன் மாதிரியாக கொண்டு, அன்பின் பிரதிபலிப்பாக மாறாவும், நீர் காட்டும் அன்பின் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யவும் தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. பஅமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மன்றாடுகின்றோம். போர்ச் சூழலை எதிர்கொள்ள உம்முடைய அமைதியும் அன்பையும் பொழிந்து, நீரே அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்றும், போர்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை அன்பின் பாதையில் நடத்திட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அனைவருக்கும் ஆறுதலளிக்கும் எம் இறைவா, இயற்கை பேரழிவுகளால் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பிட தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்..
  5. தேடிச் சென்று உதவும் உம் இறைவா! உலகெங்கும் பொருளாதார நெருக்கடிகளாலும், வறுமையாலும் வாடும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை ஆற்றிட வேண்டிய நல்ல மனதையும், சமமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி எம் சமுகத்தை வழிநடத்திட வேண்டிய ஆற்றலையும் கொடையாக தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Friday, December 12, 2025

Advent 3rd Sunday Mass Introduction 2025

திருவருகைக்கால மூன்றாம் ஞாயிறு
                             14-12-2025 ------Follow-->>> 



திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவில் இணைய இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று மகிழ்ச்சி என்னும் இறை வரத்தை மையமாக வைத்து நம்முடைய இத்திருவழிபாட்டை முன்னெடுக்க அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்து ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் நோயளிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்க நம்மிடையே மனிதராக பிறந்தார். எனவே, கிறிஸ்து அளிக்கும் மகிழ்வு என்பது பணம், பதவி மற்றும் செல்வம் போன்ற உலக இன்பங்களைச் சார்ந்ததல்ல.

பிறர் அன்பில் திளைத்து, விண்ணகத்தின் மக்களாக மகிழ்வுடன் வாழும் மானுடத்தை கட்டியெழுப்புவதே கிறிஸ்துவின் நோக்கமாகும். மனமாற்றத்திற்கு அழைக்கும் இத்திருவருகைக் காலத்தில் நம் மண்ணக செல்வத்தை பெருக்கும் வெற்று செயல்களில் ஈடுபடாமல், ஏழைகளுக்கு உணவளித்தல், நோயளிகளைச் சந்தித்தல், நம்மை வெறுப்போரை அன்பு செய்தல் போன்ற அன்பின் செயல்களைச் செய்து, கிறிஸ்து பிறப்பின் மகிழ்வை பிறருடன் பகிர்ந்து கொள்வோம். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரும் பிறக்கவிருக்கும் இயேசுவை தங்களுடைய உள்ளத்தில் வரவேற்க தயாராகுவோம். ஏனெனில், மகிழ்ச்சியற்ற உள்ளம் இறைவன் வாழ்வதற்கு உகந்தல்ல. 

எனவே, பகிர்தலின் மூலம் நம் உள்ளத்தை மகிழ்வின் இல்லாமாக மாற்றிட, கிறிஸ்து பிறப்பிற்கு நம்மைத் தாயர் செய்யும் இத்தாயாரிப்பின் கொண்டாடத்தில் மகிழ்வுடன் பங்கெடுப்போம். நம்மால் முடிந்த பொருளுதவிகளையும், செப உதவிகளையும் பிறருக்கு செய்து இறைவனை மகிழ்வுடன் நம் உள்ளத்தில் வரவேற்போம்.

கிறிஸ்துமஸ் ரீத் முன்னுரை - மகிழ்ச்சி 

மகிழ்ச்சி என்பது பகிர்த்தலில் இருந்து பிறக்கின்றது. கிறிஸ்து இவ்வுலகம் மகிழ தம்மையே நமக்காக பகிர்ந்தார். கிறிஸ்துவின் சீடர்களாகிய நாமும் பகிர்தலின் மூலம் பிறரன்பு சமூகத்தை கட்டியெழுப்ப அழைக்கப்படுகின்றோம். எனவே, நம்மிடம் உள்ளவற்றை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன்பின், நம்மையே இறைவனிடத்தில் முழுமையாக கையளிக்க வேண்டும். அவ்வாறு, நாம் பகிர்வின் படிநிலைகளை நிறைவு செய்யும் பொழுது மகிழ்வின் முதுநிலையை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் இம்மூன்றாம் திரியை ஏற்றி பகிர்வின் சமூகத்தை கட்டியெழுப்ப உறுதி ஏற்போம். 

வாசக முன்னுரைகள் 

முதல் வாசக முன்னுரை (எசாயா 35: 1-6அ,10)

பல ஆண்டுகள் அடிமைகளாக இருந்து, விடுதலைப் பெற்று நாடும் திரும்பும் இஸ்ரேயல் மக்களின் உள்ளங்களைத் தேற்றுவதற்காக எசாயா இறைவாக்கினர் இறைவாக்குறைக்கின்றார். அவருடைய வார்த்தைகள் கிறிஸ்துவின் பிறப்பை எதிர்நோக்கும் நமக்கு இன்று தரப்பட்டுள்ளது. இஸ்ரேயல் மக்களைப் போல பாவத்தின் பிடியிலிருந்து விடுபட போராடும் நம்முடைய பாவங்களை போக்க வரும் மீட்பரை எதிர்பர்த்து இம்முதல் வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (யாக்கோபு 5: 7-10)

 கிறிஸ்துவின் கட்டளைகளை கடைபிடித்து, நற்செய்தியை தங்களுடைய செயல்களால் எடுத்துரைக்கும் அனைவரும் கிறிஸ்துவின் வருகைக்காக பொறுமையுடன் காத்திருப்போம். பொறுமை இழந்து நம்முடைய உள்ளத்தை கேடான செயல்களின் மீது நாட்டம் கொள்ளாதவாறு காத்தருளுவோம் என்ற செய்திகளைக் கூறி, உள்ளத்தில் உறுதியுடன் இறைவனின் வரவை எதிர்பார்த்து நம்பிக்கையில் நிலைத்திருக்க மகிழ்வுடன் அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகெடுப்போம். 

மன்றாட்டுகள்

1. நிலையான மகிழ்வை இவ்வுலகிற்கு அளிக்க திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நற்செய்தியை பரப்பவும், அன்பும் அமைதியும் நிறைந்த நிறை வாழ்வை மேற்கொள்ளவும், எங்களுக்கு உம் அருளை பொழிந்து கிறிஸ்துவில் ஒருமைப்பாட்டுடன் வாழ வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியுடன் உலகை ஆளும் எம் இறைவா! உலகத் தலைவர்கள் அனைவரும் நீதியுடன் மக்களின் நன்மைக்காக செயல்பட, அவர்களுக்கு போதிய ஞானத்தையும் ஆற்றலையும்  அளித்தருளும். தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்களை முன் வைத்து மக்களை ஆட்சி செய்யாமல், பிறரின் மகிழ்ச்சிக்காக உழைக்க அவர்களுக்கு தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. மகிழ்வை அளிக்கவல்ல எம் இறைவா! கிறிஸ்துவைப் போல, எங்களுடைய வாழ்வை பிறருக்காக அளிக்கும் எளிய மனதை எங்களுக்கு தந்தருளும். மேலும், செப உதவியும் பொருளுதவியும் தேவைப்படும் எளிய உள்ளங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய தேவையான அருள் வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. மகிழ்வின் மகிமையை உணர்த்த குடும்பங்களை கட்டியெழுப்பும் எம் இறைவா! எம் பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியையும்; அமைதியையும் அளித்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அன்பும் பரிவும் கொண்டு வாழவும், தங்கள் உறவுகளில் ஒருமைப்பாட்டுடன் இருக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.





Thursday, December 4, 2025

Advent Second Week Mass Intro

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (07-12-2025)


*Follow the Page

*Iraivelicham Mass Introduction
*For Pdf Scroll

திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின் பெயரால்; ஒன்று கூடி வந்துள்ள இறைச் சமூகமே! திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கும் இந்நாளில் அண்டவரின் வருகைக்காக ஆயத்தமாக அழைக்கப்படுகின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் "மனம் மாறுங்கள். ஏனெனில், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என மனமாற்றத்திற்கு நமக்கு அழைப்புவிடுகின்றார். மனமாற்றம் என்பது நன்மை, தீமை அறிந்து கிறிஸ்துவின் கட்டளையின் படி வாழ்வதாகும்;. எனவே, நம்முடைய வெளிப்புற மாற்றம் என்பது நிலையானது அல்ல. அக மாற்றமே உண்மையான மாற்றம். அதுவே, நமக்கு அமைதியை அளிக்கவல்லது. 

இந்த அகமாற்றத்தினை அடைய, இறைவனோடும் நம் அயலரோடும் உள்ள உறவை கிறிஸ்துவின் அன்பின் போதனைகளின் துணை கொண்டு புதுபிக்க வேண்டும்.  புது மனிதர்களாக வாழ அழைக்கும் இன்றைய நற்செய்தி வாசகத்திற்கேற்ப நம் வாழ்வை மாற்ற வேண்டும். கடவுளுக்கு அஞ்சி இறை வார்த்தையின் படி வாழ்பவர்களே,  விண்ணரசில் நுழைய முடியும். எனவே, நாம் மனம் மாறியவர்கள் என்பதை நம் செயல்களால் காட்டுவோம். நாம் செய்த பாவத்திற்காக மனம் வருந்துவோம். பாவம் என்ற பழைய பாதையை தவிர்த்து, மன மாற்றம் என்ற புதிய பாதையில் நம் பயணத்தை தொடரவும். அன்பு, மன்னிப்பு, இரக்கம், பொறுமை போன்ற கிறிஸ்துவின் கொடைகளைப் பெற்றிடவும் இயேசுவின் வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்தும் இந்த  இறையருளிள் கொண்டாட்டத்தில் இணைவோம், செபிப்போம்.

கிறிஸ்துமஸ் ரீத் முன்னுரை - அமைதி

அன்புள்ள சகோதர சகோதரிகளே! "அமைதியை ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்". திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிறில் அமைதியின் திரியினை ஏற்றி, கிறிஸ்து அளிக்கும் அமைதி என்னும் கொடையை பற்றி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்து உலகிற்கு கொண்டு வந்த உண்மையான அமைதி நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிலைக்க இந்த ஒளி அழைப்பு விடுக்கிறது. இந்த அமைதியின் ஒளியை ஏற்றும் வேளையில், கலங்கும் இதயங்கள் அமைதியைக் காணவும், சோர்ந்த ஆன்மாக்கள் ஓய்ந்திடவும், ஒருவரை ஒருவர் ஏற்று ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழவும் சிறப்பாக செபிப்போம்.

"அமைதியை ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்". 

திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிறில் அமைதியின் திரியினை ஏற்றி, கிறிஸ்து அளிக்கும் அமைதி என்னும் கொடையை பற்றி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்து உலகிற்கு கொண்டு வந்த உண்மையான அமைதி நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிலைக்க இந்த ஒளி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இந்த அமைதியின் ஒளியை ஏற்றும் வேளையில், கலங்கிய இதயங்கள் அமைதியைக் காணவும், சோந்து போன ஆன்மாக்கள் புத்துயிர் பெறவும்; மற்றும் ஒருவரை ஒருவர் ஏற்று ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழவும் சிறப்பாகச் செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை (எசாயா 2: 1-5)

“நீதியின் அரசர் தோன்றியிருக்கின்றார், அவர் மேல் ஆண்டவரின் ஆவி தங்கியிருக்கும், அவர் மக்களை நீதியின் பாதையில் நடத்துவார்” என் எசாயா இறைவாக்கினர் எடுத்துரைக்கின்றார். அவ்விறை வாக்கின்படி, மனிதர்களை பாவத்தின் பிடியிலிருந்து மீட்டு, நிதியின் பாதையில் அழைத்துச் செல்லும் மீட்பரை, தகுந்த தயாரிப்புடன் வரவேற்க நம்மை ஆயத்தப்படுத்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை 

நம்மிடையே மனிதராக பிறக்கவிருக்கும் இயேசுவின் இல்லம், நம்முடைய உள்ளம் என்பதை நாம் நினைவு கூற வேண்டும். இருளின் செயல்களான பாவத்தின் செயல்களை களைந்து, ஒளியின் மக்களாக வாழ வேண்டும். நம்முடைய ஊனியல்பின் படி வாழாமல், கிறிஸ்து நமக்கு கற்றுத் தந்த இறை இயல்புகேற்ப வாழ வேண்டும் ஆகிய மனமாற்றத்தின் செய்திகளை எடுத்துரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

மன்றாட்டுகள்

1. அமைதி இழந்து தவிக்கும் வேளைகளில் ஓடிச் சென்று உதவும் உம்; திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நீர் கற்றுத் தந்த அமைதியின் பாதையை இம்மண்ணுலகில் முழுமையாக நிறுவிடவும், உம் பிறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் எங்கள் அனைவர் வாழ்விலும் அமைதி என்றும் மலர்ந்திடவும்; வரமருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. நீதியின் அரசரே எம் இறைவா! நாட்டுத் தலைவர்களுக்காக செபிக்கிறோம். மக்களை ஆளும் தலைவர்கள் தங்கள் சுயநலத்தை விடுத்து, பொதுநலனில் அக்கறை கொண்டு உம்மைப் போல் நீதியை நிலைநாட்ட வேண்டுமென்றும், தேவையைற்ற கலவரங்களையும், போர்களையும் கைவிட்டு, இவ்வுலகில் அமைதியை நிலைநிறுத்த அவர்களுக்கு தேவையான மனதை தந்தருள வெண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. கருணைக்கடலே என் இறைவா! உமது வருகைக்காண வழியை ஆயத்தப்படுத்தும் நாங்கள் அனைவரும், உலக இன்பங்களின் நாட்டங்களை தவிர்த்து, ஆடம்பரங்களில் அக்கறை காட்டாமல் வாழவும். இறைவார்த்தைக்கும் திருஅவை கட்டளைகளுக்கும் பணிந்து நடந்து, கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டு மனமாற்றத்தின் பாதையில்; வாழ்வை அமைத்து, புது வாழ்வு வாழவும் வரமருள உம்மை மன்றாடுகிறோம்

4. இரக்கத்தை பொழியும் அன்பு இறைவா! இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் ஜெபிக்கிறோம். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவும், தங்களின் வாழ்வின் இயல்பு நிலைக்கும் மீண்டும் திரும்பவும் அவர்களுக்கு அருள்புரியும். மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வளர்களையும், பணியாளர்களையும் ஆசிர்வதித்து, அவர்களை ஆபத்துகளிலிருந்து காத்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.


To Contact : broselvaarasu@gmail.com

Download the PDF

Send your comments to above mail



Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...