Thursday, December 26, 2024

இயேசு, மரியா மற்றும் யோசேப்பு திருக்குடும்ப பெருவிழா


இயேசு, மரியா மற்றும் யோசேப்பு திருக்குடும்ப பெருவிழா 


திருப்பலி முன்னுரை

திருக்குடும்பத்தின் உன்னதத்தை உணர்ந்து கொள்ள இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! ஆண்டின் கடைசி ஞாயிறாகிய இன்று நம் தாயாம் திருஅவை இறைமகன்  இயேசு, அன்னை மரியா மற்றும் புனித யோசப்பின் திருக்குடும்பப் பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் இறைவனை தந்தையாக விளங்குகின்றார். இப்பூவுலகின் அனைத்து உயிர்களும் இறைவனுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆகின்றோம். இந்த இறை குடும்பத்திற்கு இறைவனே தலைவராக விளங்குகின்றார். விண்ணகத்திலிருந்து இறைத்திருவுளத்தை நிறைவேற்றிய இறைவன், மண்ணகம் வந்து தன் போதனைகளை போதிக்க மனிதராய் நம்மிடையே பிறந்தார். அப்படி தன்னுடைய மனித பிறப்புக்காக அவர்கள் தேர்ந்து கொண்ட உத்தம உள்ளங்கள் தான் அன்னை மரியாவும் புனித யோசேப்பும். பாவமில்லாமல் உற்பவித்த  அன்னை மரியாவும், இறை வெளிப்பாட்டால் தெளிவடைந்த புனித யோசிப்பும் மனிதராய் பிறத்த இயேசு பாலனை நன்னெறியில் நடத்தி மனித குல மீடபுக்கு காரணமாக இருந்தார்கள். ஒரு நல்ல குடும்பத்தின் பலனை அந்த சமுதாயம் அனுபவிக்கும் என்பார்கள். அதன்படி இயேசு பாலனின் திரு குடும்பம் இவ்வுலகிற்கே ஒளி கொடுத்தது. நம்முடைய குடும்பங்களும் திருக்குடும்பத்தை பிரதிபலிப்பாக இருக்கும் பொழுது நாமும் நம்முடைய சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற பலன்களை அளிக்க முடியும். எனவே, திருக்குடும்பத்தின் பண்புகளான தாழ்ச்சி, எளிமை, விட்டுக் கொடுத்தல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துதல் போன்ற பண்புகளை நம் இல்லத்தில் வளர்த்து, நம்முடைய குடும்பத்தை இறைவன் விரும்பும் திருக்குடும்பமாக மாற்ற இந்த மகிழ்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.


வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறை மக்கள் சமுதாயத்தை கட்டி எழுப்ப இறைவன் அவ்வப்போது அவர்களுக்கான இறைவாக்கினர்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்;. இந்த இறைவாக்கினர்கள் ஒருவரான இறைவாக்கினர் சாமுவேல் இஸ்ரேயல் மக்களின் நீதித் தலைவராக இருந்து அவர்களை பல ஆண்டுகள் வழி நடத்தினார். இறைவாக்கினர் சாமுவேலின் பிறப்பை பற்றியும் அவரை இறைவனுக்கு காணிக்கையாக அளித்ததை பற்றியும் கூறும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம்முடைய இறைவன் நம் மீது எத்தனை அன்பு கொண்டுள்ளார் என்று நம்முடைய இயேசு பாலனின் பிறப்பு நமக்கு உறக்கச் சொல்கின்றது. கடவுளின் பிள்ளைகளாய் நம்மை மாற்ற, கடவுளின் பிள்ளையே இம்மண்ணில் மனிதராய் தோன்றி நம்மை நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றார். அப்படி மண்ணில் தோன்றிய இயேசு பாலனின் போதனைகளை கடைபிடிக்கும்படி வலியுறுத்தும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. இறைமகன் ஏற்படுத்திய மாபெரும் குடும்பமாகிய திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், ஒரே குடும்பமாக இருந்து, இயேசு பாலன் காட்டும் அன்பின் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், திருக்குடும்பத்தில் காணப்பட்ட இறைபண்புகளை இவ்வுலகெங்கும் எடுத்துரைத்து அமைதியான வாழ்வை அனைவருக்கும் அளிக்கவல்ல ஆற்றலை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  2. நல்ல மேய்ப்பனே எம் இறைவா! இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், மக்கள் சமுதாயத்தை தங்களுடைய குடும்பமாக கருதி, மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. உழைப்பின் உயர்வை அறிந்த எம் இறைவா! புனித யோசப்பை; போல கடினமாக உழைத்து இந்த சமுதாயத்தின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் எங்களுடைய பணியில் ஈடுபடும் பொழுது எந்தவித துன்பங்களும் எங்களை நெருங்காதபடியும் மேலும், எங்கள் பணியை சிறப்புடன் ஆற்ற தேவையான ஆற்றலையும் தந்தருளு வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 
  4. குழந்தைகளை விரும்பிய எம் அன்பு இறைவா! தலைமுறை இடைவெளியாலும், தகவல் தொழில் நுட்ப கருவிகளாலும் கட்டுண்டு தவிக்கும் எம் குழந்தைகளுக்கு, இறையரசின் மேன்மைகளை உணர்த்தும், நல்ல பண்புகனை கொண்ட வழிகாட்டிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 
  5. திருக்குடும்பத்தை முழுமைப் பெறச் செய்த எம் இறைவா! எம் பங்கில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பத்தைப் போல எம் பங்கிற்கும், சமுதாயத்திற்கும் நிறைந்த பலனை அளிக்க வேண்டுமென்றும், அதற்கு தேவையான ஆற்றல்களைக் இக்குடும்;பங்களை வழிநடத்துபவர்களுக்கு தந்து அவர்கள் ஆன்ம, உடல் மற்றும் பொருளாதார அளவில் மேம்பட வரமுருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Thursday, December 19, 2024

கிறிஸ்து பிறப்பு திருப்பலி – 25-12-24

கிறிஸ்து பிறப்பு திருப்பலி – 25-12-24



கிறிஸ்து பிறப்பு திருப்பலி – 25-12-24

திருப்பலி முன்னுரை

உன்னதத்தின் மாட்சமிகு இறைவன், மண்ணகத்தில் இறை ஆட்சியை நிறுவ மனிதராய் நம்மிடையே பிறக்கும் நன்னாளே, கிறிஸ்துமஸ் பெருநாள். சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட ஏழை எளியவர்களுக்களின் துயர் துடைக்க உதித்த இயேசு பாலன், தானும் அவர்களுள் ஒருவர் என்று மாட்டுத் தொழுவின் எளிய பிறப்பின் மூலம் இவ்வுலகுக்கு அறிவிக்கின்றார். பாவிகள் என்று சமூகத்தால் புறந்தள்ளபட்ட ஏழைகள், நோயாளிகள் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் ஆகிய அனைவரையும் தன்னுடைய உறவினராக கருதிய இயேசு பாலன் தன்னுடைய முதல் ஆசிரை அந்த எளிய உள்ளங்களுக்கு வழங்குகின்றார். பாவத்தை தண்டனைகளால் பழி தீர்க்காமல், தன்னுடைய இறைப்பண்பால் பாவிகளை மன்னித்து, இறையாட்சியை கட்டி எழுப்புகின்றார் நம்முடைய இயேசு பாலன். பிஞ்சு மணம் கொண்ட இயேசு பாலனின் ஆசிரை பெறுவதற்கு நாம் நம்முடைய உள்ளங்களை தாழ்ச்சி மிகுந்த இறைவன் வாழும் இல்லமாக மாற்ற வேண்டும்;. ஏனெனில், இறைவன் நம்மிடம்; விரும்புவது ஆடம்பரமான பலியை அல்ல, மாறாக நொறுங்கிய நெஞ்சத்தையே! கிறிஸ்து பிறப்பில் ஆவல் கொண்ட நாமும், கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நிறைவுச் செய்ய நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கோள்ள வேண்டும். முதலில், கிறிஸ்து பிறப்பிற்காக தாழ்ச்சி கொண்ட எளிய உள்ளத்தை நம்முள் உருவாக்க வேண்டும். அடுத்து, கிறிஸ்து பிறப்பின் மைய நோக்கமாகிய இறையாட்சி நிறுவுவதற்காக நம்முடைய அயலாரை அன்பு செய்ய வேண்டும். இவ்வாறு, கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நாம் முழமை பெறச் செய்யும் பொழுது, இவ்வுலகில் பாவம், சாதி, மத எற்றத்தாழ்வுகள், வறுமை மற்றும் சுரண்டல் என எதுவும் இருக்காது. எனவே, அர்த்தம் கிறிஸ்து பிறப்பில் பங்கேற்க நாம் நம்மை தகுதியாக்கிக் கொள்ள இந்த கொண்டாட்டத்தின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

இரவு திருப்பலி

முதல் வாசக முன்னுரை (எசா 9 : 2-4, 6-7)

தொடர் போர்களாலும், பஞ்சத்தாலும் வாடிய இஸ்ரேயல் மக்களை எதிர்வரும் மீட்பரின் வருகைக்காக தயார் செய்யும் இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்குகள் இன்றைய முதல் வாசக்கத்தில் இடம் பெற்றுள்ளது. நாம் செய்த பாவத்தால், இறைவன் நம்மை கைவிட்டுவிட்டார் என்று துவண்டு கிடந்த இறைவனின் மக்களை, அவர்களுக்காக புதிதாக தோன்றவிருக்கும் புது அரசர் நினைத்து மகிழ்ந்து அக்களிக்க அழைக்கும் இம்முதல் வாசகத்திற்கு ஆவலுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை ( தீத் 2 : 11-14)

இறைமகன் இயேசுவின் போதனையால் ஈர்க்கப்பட்ட பலர், இயேசுவின் பாதைகளை தமதாக்கிக் கொண்டு பயணிக்க தொடங்கினர். இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெற்றனர். அவ்வாறு திருமுருக்கு பெற்ற அனைவரும், இறைவன் மீது எவ்வாறு பற்று கொள்ள வேண்டும் என்று கற்பிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.


பகல் திருப்பலி 

முதல் வாசக முன்னுரை (எசா 52 : 7-10)

இறைவன் தம் இறைவாக்கினர்கள் மூலம் அளித்த இறைவாக்குக்கள் ஒருபோதும் பொய்த்ததில்லை. தன்னுடைய மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், அவர்களை மீட்பின் பாதையில் வழிநடத்திச் செல்லவும் அவர்களுக்கென்று ஒரு அரசரை அனுப்பிய இறைவன் தம் இறைவாக்கினர்கள் மூலம் வரவிருக்கும் மீட்பரைப் பற்றி முன்னுரைக்கின்றார். எனவே, மீட்பரின் வருகைப் பற்றியும், அவரின் வலிமையைப் பற்றியும் இம்முதல் வாசம் அளிக்கும் விளக்கங்களுக்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (எபி 1 : 1 – 18)

இறைவன பழைய ஏற்பாட்டில பல்வேறு வடிவங்களிவும், இறைவாக்கினர்களும் மூலமாக மக்களிடம் உறையாடினார் தன் அன்பின் மிகுதியால் மனித உருவெடுத்து மக்களிடையே மனிதராக தோன்றி இறைமகன,; வானதூதர்களை விட மேலானவர். இறையாட்சியை நிறுவியதன் வழியாகவும், தாம் கொண்டுள்ள இறை இயல்பின் காரணமாக தந்தையின் மகனாக இயேசு விளங்குகின்றார் என்ற மறையுண்மையை உணர்த்தும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. ஏழைகளைத் தேடிச் சென்ற எம் இறைவா! விளிம்பு நிலை மக்களை தேடிச் சென்று தேற்றும் உன் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகிறோம். கிறிஸ்து பிறப்பில் மகிழ்வு கொள்ளும் நாங்கள், கிறிஸ்து பிறந்ததன் நோக்கத்தை நிறைவேற்றவும் எளியவர்களுக்காக வாழவும் வேண்டிய வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளிலும், மக்களுக்கு உபயோகமற்ற திட்டங்களிலும் எம் நாட்டுத் தலைவர்கள் பணத்தை வீணடிக்காமல், தொலைநோக்குடைய நல்ல திட்டங்களை தீட்டி, இயேசு பாலன் கொண்டு வந்த நீதியின் பாதையில் மக்களை வழிநடத்திச் அவர்கள் வாழ்வில் உயர்வடையச் செய்ய தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நீதியை நிலைநாட்ட பிறந்த எம் அன்பு இறைவா! மணிப்பூர் கலவரத்திலும், நாடுககளுக்கிடையேயான போர்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறதலாக இருந்து, அவர்கள் வாழ்வில் அமைதியை மீண்டும் மலரச் செய்ய வேண்டுமென்றும், இந்த வன்முறைகளை நிறுத்துவதற்கான அரசியல் சூழலை உருவாக்கிட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
  4. திருக்குடும்பத்தின் நாயகனே எம் இறைவா! இயேசு பாலனின் பிறப்பால் திருக்குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி எங்கள் இல்லங்களில் ஏற்படவும், எங்கள் குடும்பங்களில் உள்ள தந்தைகளும், தாய்களும் மற்றும் பிள்ளைகளும் திருக்குடும்பத்தை பிரதிபலிக்க வேண்டுமென்றும், திருக்குடும்பத்தில் உள்ள தியாக உணர்வும், பரசபர அன்பும் எங்கள் குடும்பங்களில் மேலோங்க தேவையான இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 
  5. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு, இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இயேசு பாலனின் பிறப்பில் நம்பிக்கைக் கொண்ட நாங்கள், இறைவன் காட்டும் புதுப்பாதையில் பயணிக்கவும், இயேசுவோடு சேர்ந்து புதுவாழ்வு பெற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, December 18, 2024

திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு – 22-12-24

திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு – 22-12-24


திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு – 22-12-24

திருப்பலி முன்னுரை

இறைவனின் பிறப்பில் மகிழ்வில் பங்கு கொள்ள, தங்களையே தயார் செய்ய வந்துள்ள சகோதர சகோதரிகளே! நாம் அனைவரும் இன்றைய நாளில் திருவருகை காலத்தின் நான்காம் வாரத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம். திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு அன்பு என்ற இறை பண்பை மையமாக வைத்து நம்மை சிந்திக்க அழைக்கின்றது. இறைவன் தன்னுடைய அன்பை படைப்புகள் வாயிலாக வெளிப்படுத்துகின்றார். மனிதன் தவறிழைத்து தவறிச் சென்ற வேளையிலும் இறைவன் ஒரு பொழுதும் அன்பு செய்யத் தவறியதில்லை. அந்த அன்பின் உச்சமாக தன்னுடைய ஒரே மகனை இவ்வுலகிற்கு அளித்தார். தந்தையின் வலப்புறம் வீற்றிருந்த இறை மகனும் மனித உருவில்; குழந்தையாய் நமக்காக பிறந்தார். இறைவன் ஏற்றுக் கொண்ட இத்துன்பங்கள் வழியாக நம் மீது அவர் கொண்ட அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார். இதைத்தான் அன்னை தெரசா அவர்கள், நம்மிடத்தில் உள்ளவற்றை அன்பு மிகுதியால் பகிரும் பொழுது, நாம் துன்பப்படும் வரை அதை நிறுத்த கூடாது என்கின்றார். இறைமகன் இயேசு தாழ்ச்சியை தனதாக்கிக் கொண்டு இறை நிலையை விட்டு மனித நிலையை ஏற்றதற்கான ஒரே காரணம் அவர் நம் மீது கொண்ட அன்பு. நாமும் தாழ்ச்சியை நமதாக்கிக்கொண்டு, பிறருக்கு உதவும் வகையில் இயேசு காட்டி அன்பின் பாதையில் பயணிக்க இந்த அன்பின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

எப்ராத்தா, பெத்லகேமிலிருந்து இஸ்ரயேலின் மீட்பரும் உலகின் ஆண்டவரும் தோன்றுவார் எனக் கூறுகின்றன. மீட்பரின் வருகை அமைதியும் மீட்பும் தரவல்லது. எளிய சிறு இடத்திலிருந்து சிறியதாய் தோன்றும் இறைவன் எண்ணற்ற பல மாற்றங்களை ஆற்ற வல்லவர் என்ற நமபிக்கை அளிக்கும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்துவின் வருகையால் பழைய ஏற்பாட்டின் பலிகளுக்குப் பதிலாக ஒரு புதிய ஏற்பாடு உருவாகியது. எபிரேயருக்கு எழுதிய இந்த வசனங்கள் கிறிஸ்துவின் தியாகத்தால் இறைவனின் திருவுளம் நிறைவேறி, மனிதர்கள் தூய்மையடைந்ததை அறிவிக்கின்றன. மீட்புப் பெறுவதற்கான வழிகளைக் கற்பிக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. பரிபூரண அன்பை பொழியும் எம் இறைவா! உம் அன்பின் போதனைகளை உலகெங்கும் கொண்டு சென்றிட நீர் ஏற்படுத்திய திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும், உம்முடைய பிறப்பிற்காக தங்களை தயார் படுத்தவும், தங்களிடம் உள்ள உயர்ந்த பண்புகளை பிறருக்கு உகந்த வகையில் பயன்படுத்திடவும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பின் ஆழத்தை எங்களுக்கு காட்டிய எம் இறைவா! எங்களிடத்தில் உள்ள அனைத்து அன்புகளும், எங்களுடைய பகிர்வின் வாயிலாக வெளிப்படவும், உம்மையே நாங்கள் முன் மாதிரியாக கொண்டு, அன்பின் பிரதிபலிப்பாக மாறாவும், நீர் காட்டும் அன்பின் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யவும் தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறiவா! சிரியாவிலும்; மற்ற உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைதியான வாழ்வளிக்கவும், இந்த நிலையை எதிர்கொள்ள உம்முடைய அமைதியும் அன்பையும் பொழிந்து, நீரே அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்று எம்மை மன்றாடுகின்றோம்.
  4. அனைவருக்கும் ஆறுதலளிக்கும் எம் இறைவா, இயற்கை பேரழிவுகளால் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, அவர்களின் இயல்பு வாழ்க்கை;க்கு மீண்டும் திரும்பிட தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. தேடிச் சென்று உதவும் உம் இறைவா! உலகெங்கும் பொருளாதார நெருக்கடிகளாலும், வறுமையாலும் வாடும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை ஆற்றிட வேண்டிய நல்ல மனதையும், சமமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி எம் சமுகத்தை வழிநடத்திட வேண்டிய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Thursday, December 12, 2024

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு – 15-12-2024

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு – 15-12-2024



திருப்பலி முன்னுரை

எளிய வடிவில் ஆழமான விசுவாசத்தைக் கொண்டிருந்த இடையர்களுக்கு தோன்றிய வான தூதர்கள் பெருமகிழ்வு தரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றோம் என்று கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தார்கள். வறண்டு போன இதயங்களை வளமிகு இதயமாக மாற்ற இறைமகன் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்து, இறைவனின் ஈடில்லா கொடையான மகிழ்ச்சியை நமக்கு தருகின்றார். இறைவனில் நம்பிக்கை கொண்டு, அமைதியின் பாதையில் பயணித்தால் இறைவன் தரும் மகிழ்ச்சியை நாம் பெற முடியும். திருவருகைக்காலத்தின் மூன்றாம் வாரமும், இறைவன் அருளும் மகிழ்ச்சியை மையமாக வைத்து நம் வாழ்வை சீர்படுத்த நம்மை அழைக்கின்றது. இன்றைய வாசகங்களும் இதைனையே எடுத்துரைக்கின்றன. இறைவன் தரும் மகிழ்ச்சியை நாம் எவ்வாறு பெற்று அக்களிக்க வேண்டும் என்று முதல் இரண்டு வாசகங்களும் கூறுகையில், நற்செய்தி வாசகம் நாம் அந்த மகிழ்வை பெறுவதற்கான வழியை காட்டுகின்றது. நாம் நம்மிடத்தில் உள்ளவற்றை பிறரோடு பகிர்ந்து வாழ்வதன் மூலம், நம்மை நிலைகுலையச் செய்யும் பயத்தை துறந்து மகிழ்வை பற்றி கொள்கின்றோம். மாட்டு தீவனத் தொட்டியில் பிறந்த இயேசு கிறிஸ்து தன்னையே இவ்வுலகத்திற்கு உணவாக பகிர்ந்தளித்ததன் மூலம் இறைவன் தரும் நிலையான பெரு மகிழ்வில் பங்கெடுத்தார். நாமும் நம்மிடம் உள்ள நல்ல குணங்களையும், தேவைக்கு அதிகமான செல்வத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது இறைவன் தரும் பெருமகிழ்வில் பங்கு கொள்ள முடியும். எனவே பகிர்வின் பண்பை நம் இயல்பாக மாற்ற இந்த மகிழ்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

கிறிஸ்துமஸ் ரீத் - மகிழ்ச்சி முன்னுரை

நம்பிக்கையும் அமைதியும் வலுப்பெற்ற இடத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும். திருவருகை காலத்தின் மூன்றாம் வாரத்தில் மகிழ்ச்சி என்று இறை வரத்தை பற்றி சிந்திக்கவும் அதை பெறுவதற்காகவும் நாம் அழைக்கப்படுகின்றோம். இறைவனின் எல்லையில்லா அன்பை நாம் பெரும்பொழுது இறைவனின் பெருமகிழ்வில் பங்கெடுக்கின்றோம். இறைவனின் எல்லையில்லா அன்பை பெறுவதற்கான ஒரே வழி, இறைவன் அளித்த இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளை பின்பற்றுவதே. நாம் நம் அயலாரை நேசித்து, அவரோடு பகிர்ந்து வாழும் பொழுது இறைவன் நம் மீது அன்பு கூறுகின்றார். இவ்வாறாக, அன்பு கூறும் இறைவன் நமக்கு மகிழ்ச்சியை தருகின்றார். இறைவன் தரும் பெரு பெரு மகிழ்வில் பங்கெடுக்க நம்மை நாம் தகுதியாக்கவும், அதன் மூலம் நம் வாழ்வில் ஒளி பெறுவதன் அடையாளமாக இம்மூன்றாம் திரியாகிய மகிழ்வின் திரியில் ஒளியேற்றி நம் வாழ்வை பொலிவடையச் செய்வோம் இறைவன் தரும் ஆசிகளை நிறைவாக பெறுவதற்காக முழு மனதுடன் ஜெபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் செப்பனியா எழுதிய நூலிளிருந்து கொடுக்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில் இறைவாக்கினர் அவர்கள், மக்களுக்கு தைரியத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கும் வார்த்தைகளை பகிர்கின்றார். அஞ்சாமை, நம்பிக்கை, மற்றும் மகிழ்ச்சியை வாழ்வில் அளிக்கவல்ல இவ்வார்த்தைகள், இறைவனின் அன்பையும் அருளையும் நமக்குள் உறுதியூட்டுவதற்காய் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரில் இணைந்த மகிழ்ச்சி, நன்றியுடன் கூடிய இறை வேண்டல், மற்றும் அஞ்சாமையை ஆகியவற்றை வளியுறுத்தும் இவ்விரண்டாம் வாசகம், கடவுளின் அமைதியானது நம் உள்ளத்தையும் மனத்தையும் காத்திடும் என்பதைக் கூறுகின்றன. இறைவனின் பிறப்பில் மகிழ்வதற்காய் நமக்கு அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. மகிழ்வை மணம் பரப்பச் செய்ய திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! திருஅவையினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் நற்செய்தியை பரப்பவும், அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ளவும் அவர்களுக்கு உம் அருளை அளித்து, ஒருமைப்பாட்டில் வாழ வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. நீதியுடன் உலகை ஆளும் எம் இறைவா! உலகத் தலைவர்கள் அனைவரும் நீதியுடன் மக்களின் நன்மைக்காக செயல்படவும். அவர்களுக்கு தெய்வீக அறிவும் சக்தியும் அளித்து, மகிழ்ச்சியுடன் வாழவும், பிறரின் மகிழ்ச்சிக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. மகிழ்வை அளிக்கவல்ல எம் இறைவா! எங்கள் இதயங்களில் மகிழ்ச்சி மலர்ந்து, அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்வை வாழந்திடவும், எங்கள் இதயத்தில் குடிகொள்ளும் மகிழ்வை, பிறருடன் பகிர்ந்து வாழும் பக்குவத்தை தந்தருள வேண்டுமென்றும், உம் அருளால் வாழ்வில் மகிழ்ச்சி பரவி, அமைதியில் வாழ வரமருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.
  4. மகிழ்வின் மகிமையை உணர்த்த குடும்பங்களை கட்டியெழுப்பும் எம் இறைவா! அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் அமைதியையும் அளித்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அன்பும் பரிவும் கொண்டு வாழவும், தங்கள் உறவுகளில் ஒருமைப்பாட்டுடன் இருக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. இயற்கையை ஆளுகை புரியும் எம் இறைவா! எங்களுக்கு வேண்டிய மழையை தந்தமைக்காக உமக்கு நன்றி கூறும் இவ்வேளையில், வரவிருக்கும் நாட்களிலும் போதிய மழயைப் பெற்று, இயற்கையுடன் இணைந்து வாழம் ஆற்றலைத் தந்தருள வேண்டுமென்றும், கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் புரிந்திட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.

Thursday, December 5, 2024

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு 08-12-2024

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு 08-12-2024



திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு 08-11-2024

திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின் வருகைக்கான தயாரிப்பில் இருக்கும் நாம், திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறில் அமைதி என்ற இறைவனின் பேரருளை மையமாகக் கொண்டு சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். அமைதி என்பது, நம் அகத்திலிருந்து பிறக்கின்றது என்கிறார் புத்தர். உண்மையில், சமுக பழுமைவாதத்தாலும் உலக மாயைகளாலும் நாம் உண்மையான அமைதியை அடைய முடியாது. பள்ளங்கள் நிறைந்த இந்த பாதையை சமன்செய்யவே, இயேசு பாலன் நம் அகத்தின் அமைதியை அலங்கரிக்க நம்மிடையே பிறக்கிறார். எவ்வித பிரச்சனைகளுமின்றி, சண்டை சச்சரவுகளும் இல்லாமல் வாழ்வது முழமையான அமைதி அல்ல. முழுமன நிறைவுடன், இறைவனோடு இணைந்த நிலையில் வாழ்வதே அகநிலை அமைதியாகும். மனிதர்கள் தங்கள் வாழ்வின் பிரச்சனைகளை பணம், பதவி மற்றும் உலக இன்பங்கள்  மூலமாக திர்வு கண்டு அமைதி அடையலாம் என்று கருதுகின்றனர்.  உலக நாடுகள் தங்களின் எல்லைகளில் உயரக கருவிகளையும், ஆயுதங்களையும் கொண்டு துப்பாக்கி மொழியினால் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். உண்மையான அமைதி என்பது நாம் ஒருவர் மற்றவரிடத்தில் கொண்டுள்ள அன்பின் மூலமாகவே முழுமை பெறும். அமைதி இழந்த இவ்வுலகிற்கு அமைதியை கொணர வந்த பாலன் இயேசுவின் புன்னகையின் மலர்ச்சியைப் போல் நம் வாழ்வில் அமைதி மலர வேண்டி, இந்த அகஅமைதி அளிக்க வல்ல உயர்வின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

கிறிஸ்துமஸ் ரீத் - அமைதி முன்னுரை

திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் இயேசு பாலன் அளிக்கும் அமைதி என்னும் கொடையை பெற்றுக் கொள்ள நம்மையே நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவினுடைய பிறப்பு, சமூகத்தின் கடைநிலையானவர்கள் என்று கூறப்பட்ட இடையர்களுக்குதான் முதலில் அருளப்பட்டது. இயேசு பாலனின் ஆசிரும் அவர்களுக்குத்தான் முதலில்  வழங்கப்பட்டது. ஏனெனில், கிறிஸ்து இவ்வுலகிற்கு கொண்டு வரும் அமைதியானது எளியவர்களுக்கானது. திருவருகைக்காலத்தின் முதல் வாரத்தில் நம்முடைய நம்பிக்கை உறுதிப்படுத்திய நாம் இரண்டாம் வாரத்தில் இறைவன் அருளும் அமைதியை பெறுவதன் அடையாளமாக அமைதியின் திரியை ஏற்றி இவ்வாரம் முழுவதும் இறைவன் அருளும் அக அமைதியை நம் ஆடையாக ஏற்றுக் கொள்ள சிறப்பாக வேண்டி ஜெபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பாருக்கு நூலிளிருந்து வாசிக்கப்படும் முதல் வாசகம்; எருசலேமின் மறுமலர்ச்சியையும், கடவுளின் மாட்சியிலும் இரக்கத்திலும் அது அடையும் உயர்வையும் எடுத்துரைக்கிறது. பகைவரால் சிதறிய இஸ்ரேயல் மக்களை கடவுள் திரும்ப அழைத்து, நீதியுடனும் அமைதியுடனும் புதுப்பாதையில் நடத்திடுவார் என்ற நம்பிக்கையும், இறைவனின் மக்களை இறைவன் கைவிடுவதில்லை என்ற உறுதியையும் அளிக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுல், பிலிப்பியர்களின் நற்செய்திப் பணியில் காணப்படும் உறுதியையும் கடவுளின் கருணையையும் புகழ்ந்து எழுதுகிறார். அவர் அவர்களுக்கான தனது மன்;றாட்டுகளையும், ஆவலையும் பகிர்ந்துகொள்கிறார். அன்பிலும் அறிவிலும் மேன்மேலும் வளர்ந்து, குற்றமற்றவர்களாக நேர்மையுடன் வாழ்ந்து, கிறிஸ்துவின் நாளுக்கென்று நீதியின் செயல்களால் நிரம்பியவர்களாக இறைவனை மகிழ்விக்கவே வாழ வேண்டும் என்ற பவுலின் உள்ளக் குரலை இவ்விரண்டாம் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

மன்றாட்டுகள்

  1. அமைதி இழந்து தவிக்கும் வேளைகளில் ஓடி சென்று உதவும் உம்; திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் நீர் கற்றுத் தந்த அமைதியின் பாதியை இம்மண்ணுலகில் நிறுவிடவும், உன் பிறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் எங்கள் அனைவர் வாழ்விலும் அமைதி மலரவும் வரமருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
  2. பல்வேறு கலவரங்களிலும், வன்முறையிலும் தங்கள் வாழ்க்கையை இழந்த அனைவருக்காகவும்  மன்றாடுகிறோம். அமைதியிழந்து அகதியாய் தவிக்கும் இவர்களுக்கு நீரே ஆறுதலாக இருந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும் இருக்க வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்
  3. எங்கள் குடும்பங்கள் அனைத்தும் திரு குடும்பத்தை பிரதிபலித்து, திருக்குடும்பத்தில் நிலவிய அன்பு, அமைதி மற்றும் பரிவு போன்ற இறை மதிப்பீடுகளில் மேலோங்கவும், கிறிஸ்துவின் பிறப்பால் திருக்குடும்பம் நிறைவு பெற்றது போல, கிறிஸ்துவின் வருகையால் எங்களின் ஒவ்வொருவரின் குடும்பமும் நிறைவு பெற வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. கிறிஸ்துவின் அன்புப் பணியை உலகெங்கும் ஆற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்காவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு நீரே துணையாக இருக்க வேண்டுமென்றும், மேலும் இவர்கள் செய்யும் பணியை தொடர்ந்தாற்ற தேவையான இறை அழைத்தல்களை எங்கள் பங்கில் உருவாக்கி தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. எங்களை அதிகமாக நேசிக்கும் அன்பு இறைவா! இறைவனே மனிதனாக பிறந்து இயற்கையின் அங்கமானதை நாங்கள் உணர்ந்து, இயற்கையுடன் இணைந்து வாழ எங்களுக்கு தேவையான அறிவையும், பருவநிலை மாற்றத்தோடு இணைந்து வாழும் ஆற்றலையும் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

Thursday, November 28, 2024

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 01-12-2024

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 01-12-2024

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 01-12-2024

திருப்பலி முன்னுரை

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறில் அடியெடுத்து வைக்கும் நாம் அனைவரும் கிறிஸ்துவின் வருகைக்காக நம் உள்ளத்தை தயார் செய்ய அழைக்கப்படுகின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் வருகைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மனிதர்கள் மேல் இறைவன் கொண்ட எல்லையில்லா அன்பின் அடையாளமாக, விண்ணுலகில் இறைவனின் வலப்பக்கம் வீற்றிருந்த இறைமகன், மண்ணுலகில் மனிதராய் நமக்காக, நம்முள் ஒருவராய் பிறக்கின்றார். இப்படி பிறக்கும் இயேசு பாலகனை எதிர்நோக்கி காத்திருக்கும் காலமே திருவருகைக்காலம். பகிர்வு மற்றும் தாழ்ச்சி என்ற இரண்டு இறை மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்க இறைமகன் இயேசு கிறிஸ்து மனித உறவில் நம்மிடையே பிறக்கின்றார். பகிர்வு மற்றும் தாழ்ச்சி என்ற குணங்களை நாம் பெறும் பொழுது நாம் எவ்வித பாவமுமின்றி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மகிழ்வை பெறுகின்றோம். இறைமகன் இயேசுவின் பிறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் நாம், பகிர்வு மற்றும் தாழ்ச்சியை என்ற குணங்களைப் பெற்று பாவத்தை விட்டு விலகி அருள்வாழ்வு வாழ்வதற்காக இத்திருப்பலியில் சிறப்பான முறையில் பங்கேற்று செபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பாவத்தில் விழுந்த இஸ்ரேயல் மக்களை மீட்பதற்காக, ஒரு மீட்பரை அனுப்புவதாக இறைவன் இறைவாக்கினார்கள் வழியாக முன்மொழிந்தார். இவ்வுலகிற்காய் பிறக்க போகும் மீட்பரை பற்றியும், அவருடைய வருகையைப் பற்றியும் எடுத்துரைக்கும் எரேமியா இறைவாக்கினரின் வார்த்தைகளை இம்முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைமகன் இயேசுவின் போதனையால் ஈர்க்கப்பட்ட பலர், இயேசுவின் பாதைகளை தமதாக்கிக் கொண்டு பயணிக்க தொடங்கினர். இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெற்றனர். அவ்வாறு திருமுருக்கு பெற்ற அனைவரும், இறைவன் மீது எவ்வாறு பற்று கொள்ள வேண்டும் என்று கற்பிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. இறையன்பையும், இறைவன் தரும் மீட்பையையும் இவ்வுலகிற்கு என்றென்றும் அளிப்பதற்காக உழைக்கும் திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உம்முடைய அன்பின் பாதையில் பயணித்து, இறைவன் தரும் மீட்பை நாங்கள் எமதாக்கிக் கொள்ள வரமருள வேண்டுமென்று உம்;மை மன்றாடுகிறோம்.
  2. இவ்வுலகத் தலைவர்கள் தங்களின் நலனிலும், புகழிலும் அக்கறை கொள்ளாமல், மக்களின் நலனுக்காக இடைவிடாது உழைக்கவும், மக்களை இனத்தின் அடிப்படையில் பிரித்தாளாமல் அன்பினை ஆதாரமாக வைத்து, அமைதியான உலகை உருவாக்கவா வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்
  3. இறையரசை நிறுவிய எம் இறைவா! கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றில் முழுமையான நம்பிக்கை கொண்டு, கிறிஸ்துவின் வாழ்வை எங்களுடைய பாதையாக மாற்றிக்கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அமைதியை உலகிற்கு கொண்டு வந்த எம் இறைவா! இவ்வுலகில் நிகழும் போர்களாலும், கலவரங்களாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நீரே ஆறுதலாக இருந்து அவர்களின் உடல், உள்ள மற்றும் ஆன்ம நலன்களை நிறைவு செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. கிறிஸ்துவின் பிறப்பை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்கும் எங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும், இறைவன் தரும் அன்பை நாங்கள் முழுமையாக உணர்ந்து அதை எங்கள் இல்லத்திலும், சமூகத்திலும் பிறருடன் பகிர்ந்து முழுமையான மனித வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, November 20, 2024

கிறிஸ்து அரசர் பெருவிழா 24-11-2024

கிறிஸ்து அரசர் பெருவிழா 24-11-2024

கிறிஸ்து அரசர் பெருவிழா 24-11-2024

திருப்பலி முன்னுரை

திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்து அரசரின் பெருவிழாவைக் கொண்டாட அழைக்கப்படுகின்றோம். ஏழ்மையின் வடிவாய் மாட்டு தொழுவத்தில் பிறந்த இறைமகன் இயேசு, தன் அன்பின் போதனையால் அனைவரையும் தன்பால் ஈர்த்து இவ்வுலகின் அரசராக விளக்குகின்றார். இறைத்திருவுளத்தை நிறைவேற்றுவதையே, என் உணவு என்று மொழிந்த இயேசு கிறிஸ்து, இறையாட்சியை கட்டி எழுப்பதின் வாயிலாக, இறையாட்சின் அரசராக விளங்குகின்றார். இவ்வுலக அரசர்களும், தலைவர்களும் தங்களுடைய மக்கள் தங்களை கொண்டாட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், நம்முடைய இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களை தன் மீது ஏற்றுக் கொண்டு நமக்காக சாவை எதிர்கொள்ளும் போர்வீராக, நம்மை பாவத்திலிருந்து மீட்டார். நமக்காக இயேசு எளிமையை தேர்ந்து கொண்டார். பாவத்தில் விழுந்த மக்களை, தன் அன்பின் ஆளுகைக்குள் கொண்டு வந்து, இறையன்வையும், பிறர் அன்பையும் மையமாக வைத்து வாழும் படி நம்மை அழைக்கின்றார். நாம் இறைவனையும், நம் அயலாரையும் முழு மனதுடன் அன்பு செய்யும் பொழுது கிறிஸ்து அரசரின் குடிமக்களாகின்றோம். இவ்வுலகில் அன்பின் பற்றாக்குறையினால்தான் வன்முறைகள், கலவரங்கள் மற்றும் இனவெறி தாக்குதல்கள் என அனைத்தும் நிகழ்கின்றன. எனவே, நம்முடைய இல்லங்களிலும், நம்முடைய சமூகத்திலும் கிறிஸ்து அரசரின் இறையாட்சி மதிப்பீடுகள் மேலோங்க இத்திருப்பலியில் ஜெபிப்போம். மேலும், மதப் பிளவு வாதத்தாலும், இன வேற்றுமையாலும் மணிப்பூரில் நிலவும் வன்முறைகளை விரைவில் முடிவிற்கு வந்து அங்கு அமைதி நிலவ வேண்டுமென்று நம் கிறிஸ்து அரசரிடம் சிறப்பான முறையில் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பாவத்தில் விழுந்த தன் மக்களை, பாவத்தின் கோர பிடியிலிருந்து மீட்பதற்காக இறைவன் ஒரு மீட்பரை அனுப்புவதாக பல இறைவாக்கினர்கள் வழியாக முன்மொழிந்தார். இன்றைய முதல் வாசகத்தில் தானியேல் இறைவாக்கினரும் வரவிருக்கும் மீட்பரைப் பற்றி எடுத்துரைக்கின்றார். எல்லா நாட்டிற்கும் அரசராக வரப்போகும் மீட்பரை பற்றி எடுத்துரைக்கும்; இம்முமுதல் வாசகத்திற்கு கிறிஸ்து அரசரின் வருகையை எதிர்பார்தது, கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இவ்வுலகில் எந்த அரசராலும் வெற்றி கொள்ள முடியாத சாவை, நம்முடைய கிறிஸ்து அரசர் வெற்றி கொண்டார். உலக மக்களின் பாவங்களுக்காக மரித்த இயேசு கிறிஸ்து சாவின் சூழ்ச்சியை வென்று நம்மை பாவத்திலிருந்து மீட்டார். அப்படி நம்மை மீட்ட இறைவன் என்றென்றும் இருக்கின்ற இறைவனாய் இருக்கின்றார் என்பதை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. திருஅவையின் தலைவரே எம் இறைவா! கிறிஸ்து அரசின் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும், கிறிஸ்து அரசரின் மதிப்பீடுகளை நன்குணர்ந்து, அதன் படி வாழவும், கிறிஸ்துவின் அன்பு பாதையை உலகெங்கும் பரப்பவும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அரசர்களுக்கெல்லாம் அரசரே எம் இறைவா! மக்களை ஆளும் தலைவர்கள் அனைவரும் தங்களின் சுயநலம் பாறாமல், கிறிஸ்து அரசரைப் போல பிறர்நலனைப் பேணவும், மக்களிடம் உள்ள பாகுபாடுகளைக் களைந்து, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அமைதியை நிலைநாட்ட வந்த எம் இறைவா! மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்ட்ட அனைவருக்கும் நீரே அருதலாக இருந்து, அங்குள்ள பதற்ற சூழ்நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றும், பெண்கள் மீது நடத்தப்டும் தொடர் தாக்குதல்களை முழவதுமாக நிறுத்த வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அன்பை போதித்த எம் இறைவா! கிறிஸ்து அரசின் இறையாட்சி மதிப்பீடுகளான இறையச்சம், பிறரன்பு மற்றும் எற்றுக்கொள்ளல் ஆகியவை எங்கள் இல்லங்களில் என்றும் நீடித்திருக்கவும், கிறிஸ்து அரசின் குடிமக்களாக நாங்கள் எங்கள் இல்லங்களிலும், சமுதாயத்திலும் வாழவும் வேண்டிய வரங்களை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. ஏழ்மையை நீக்க வந்த எம் இறைவா! போர்களாலும், தவறான பொருளாதார கொள்கைகளாலும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் அனைவரின் வாழ்வையும் நீரே மேம்படுத்த வேண்டும், அவர்கள் வாழ்வின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...