Friday, July 26, 2024

பொதுக்காலம் 17ம் ஞாயிறு 28-07-2023

 பொதுக்காலம் 17ம் ஞாயிறு 28-07-2023


பொதுக்காலம் 17ம் ஞாயிறு 28-07-2023


திருப்பலி முன்னுரை

வெண்ணிற அப்பமும், திராட்சை இரசமும் இயேசுவின் திருவுடலாகவும், திருஇரத்தமாகவும் மாறும் அருளடையாளக் கொண்டாட்டத்தில் பங்கொள்ள வந்திருக்கும் சகோதர சகோதரிகளே! இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவு கூறும் பொதுக்காலத்தின் 17ம் ஞாயிற்று திருப்பலியில், இயேசு எவ்வாறு மக்களுக்கு தன்னுடைய இறை இயல்பை வெளிப்படுத்தினார் என்பதை அறிந்து கொள்ளவதற்கு நம் தாயாம் திருஅவை நமக்கு அழைப்பு விடுகின்றது. கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற்று, அவரால் இணைக்கப்பட்ட நாம் அனைவரும், கிறிஸ்துவை தலையாகக் கொண்டு அவர் உடலின் பாகங்களாக செயல்படுகின்றோம். நாம் அனைவரும் எவ்வித வேறுபாடுமின்றி கிறிஸ்துவின் இரத்தால் மீட்புப் பெற்றுள்ளோம். நமக்காக இம்மண்ணுலகில் பிறந்த இயேசு கிறிஸ்து தன் வாழ்வாலும், மலைப்பொழிவாலும், சிலுவைப் போதனையாலும் தன் அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார். அதன் ஒரு பகுதியாகவே அப்பத்தை பலுக பெருகச் செய்து தன் இறைத்தன்மையையும், மக்களிடத்தில் தாம் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்துகின்றார். அதன் தொடர்ச்சியாக நம்மிடையே அப்ப, இரச வடிவில் இயேசு இன்றும் நம்மிடையே இருக்கின்றார். நம்மிடையே என்றும் வாழும் இறைவனின் இயல்பை பெற தகுதி பெறும் பொருட்டு இந்த மகிழ்வின் கொண்டாட்டத்தில் மகிழ்வுடன் பங்குகொள்;வோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

எல்லாம் வல்ல இறைவனால் இயலாதது எதுவுமில்லை. இறைவனின் வாக்கை இம்மியும் வழுவாது பின்பற்றினால், இறைவன் நமக்காக வைத்திருக்கும் பல புதுமைகளை நாம் பெறலாம்.  இறைவனின் வார்த்தைகளை பின்பற்றியதால் இறைவாக்கினர் எலியா செய்த புதுமையை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

எல்லாருக்கும் மேலான இறைவனின் இறைப்பண்புகளையும், அவருடைய இயல்புகளையும் நாம் நம்முடைய அறிவால் அல்ல, அனுபவத்தாலே தெரிந்துகொள்ள முடியும். அப்படி அறிந்துகொண்ட கிறிஸ்துவின் மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தை பக்தியுடன் கவனிப்போம்.

மன்றாட்டுகள்

1. இறைவாக்கினர்களை இவ்வுலகிற்கு அனுப்பிய எம் இறைவா! இறைவாக்கினர்களின் பணியை இவ்வுலகில் ஆற்றும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் அனைவரும் இறைவாக்குரைக்கும் பணியை முழு ஈடுபாட்டுடன் ஆற்றிட தேவையான இறைவலிமையை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


2. உறவை மேம்படுத்தும் எம் இறைவா! நாடுகளுக்கிடையிலும், இனக்குழுக்களுக்கும் இடையும் உள்ள மோதல்களை சரிசெய்து, அனைவரும்; இறைவனின் பிள்ளைகள் என்ற கண்ணோட்டததுடன் ஒருவரொருவரை நடத்திட வேண்;டிய மனித பண்புகளை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. பகிர்வின் நாயகனே எம் இறைவா! எம் நாட்டு தலைவர்கள் நாட்டின் மொத்த வளங்களையும் தங்களுடைய சுயநல எண்ணங்களுக்காக ஓரே இடத்தில் குவிக்காமல். அனைவருக்கும் சமமான முறையில் பகிர்ந்தளிக்கவும், நாட்டினை வெறுப்புணர்வின் அனலில் அளாமல,; அனைவரையும் அரவணைத்து செல்லும் நல்ல பண்பினை தந்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.


4. சொல்லுக்கு செயல் வடிவம் அளிக்கும் அற்றலை எங்கள் அனைவருக்கும் தந்தருளும். பிறரிடத்தில் நாங்கள் கொண்டுள்ள அன்பை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தாமல் அன்பு நேச செயல்களால் வெளிப்படுத்தி, அன்பால் எம் சமுகத்தை கட்டி எழுப்ப வேண்டிய அணைத்து வரங்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


5. குணமளிக்கும் எம் இறைவா! மாறிவரும் காலநிலை மாற்றத்தாலும், துரித உணவு கலச்சாரத்தாலும் பாதிக்கப் பட்டு, உடல் நோயல் வருந்தும் அனைவரையும் முழமையாய் ஆசிர்வதித்து, அவர்களுக்கு பூரண உடல் நலனை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download Pdf 

Leave your comments and Share with your Friends




Friday, July 19, 2024

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு 21 - 07 - 2024

 

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு




திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசு கிறிஸ்துவை ஆயனாக கொண்டு வாழும் இறைமக்கள் சமூகமே உங்கள் அனைவரையும் பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம். .  இன்றைய உலகின் தலைவர்கள் தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு சாராருக்கும், மற்றொரு சாராருக்கும் இடையே வெறுப்பை உண்டாக்கி அந்த வெறுப்பில் குளிர்காய்கின்றனர். ஆனால், பரந்த இவ்வுலகின் ஆயனாகிய இயேசு கிறிஸ்து அன்பு வழியை போதித்து தம் மந்தையின் ஆடுகளை அமைதியின் வழியில் வழி நடத்துகின்றார். ஆகையால், நாம் கிறிஸ்து அளிக்கும் அமைதி வழியை விட்டும், அன்பு வழியை விட்டும் விலகும் பொழுது நாம் கிறிஸ்துவை விட்டு விலகுகிறோம் என்று பொருளாகின்றது. பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்ட நம்முடைய மீட்பர் நம்மிடத்தில் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். அதுதான் அனைவரையும் அன்பு செய்யுங்கள். கிறிஸ்துவின் பெயரால் திருமுருக்கு பெற்று கிறிஸ்துவின் மந்தையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்து குரலுக்கு செவிசாய்த்து அன்பு வழி வழியில் பயணிப்போம்  அப்பொழுது கிறிஸ்துவின் மந்தையின் சிறந்த உறுப்பினராக இருப்போம் என்ற தெளிவோடு இந்த உறவின் கொண்டாட்டத்தில் பக்தியுடன்  இணைவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

தங்களின் சுயநல எண்ணங்களுக்காக மக்களை பிரித்தாளுபவர்கள் மக்களுடைய வாழ்வின் நலனில் அக்கறை கொள்வதில்லை. ஆனால், உண்மை ஆயன் மக்களை ஒன்றிணைத்து நன்மையின் வழி கூட்டிச் செல்கின்றார் என்ற செய்தியை கூறும் முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

வெவ்வேறு காரணங்களால் வேறுப்பட்ட மக்கள் சமுதாயத்தை கிறிஸ்து தம் இரத்தத்தின் வழியாக ஒன்றாக கட்டுகின்றார். எண்ணங்கள் வெறுப்பட்ட நாம், கிறிஸ்துவால் ஒன்றினைக்கப் படுகின்றோம் என்ற செய்தியை கூறும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1.       திருஅவையை கட்டியெழுப்பிய எம் இறைவா! போர்களாலும், உள்நாட்டு பிரச்சனைகளாலும் சிதறுண்ட இவ்வுலகை, அன்பின் போதனையால் அமைதிப்படுத்தும் ஆற்றலை உம் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2.       நல் ஆயனே எம் இறைவா ! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களின் சுயநலனுக்காக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தாமல் , மக்களை நீதியுடன் நடத்திட தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3.       எங்களுடைய இல்லங்களிலும், உள்ளங்களிலும் வாழும் கிறிஸ்து , எங்களிடத்தில் உள்ள வேற்றுமைகளை களைந்து நாம் அனைவரும் இயேசுவின் பிள்ளைகள் என்ற எண்ணத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

4.       எம் பங்கின் குழந்தைகள் அனைவருக்கும் , கிறிஸ்துவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்து, அவர்களை இறைவன் காட்டும் பாதையில் வழிநடத்தும் ஞானத்தை அவர்களுடைய பெற்றோர்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

5.       இயற்கையை ஆளுகை செய்யும் எம் இறைவா! தண்ணீர் பஞ்சத்தால் அல்லலுறும் அனைவருக்கும் தண்ணீரின் அருமையை உணர்த்தி, இனிவரும் காலங்களில் தண்ணீரை சேமிக்கவும், இயற்கையை பாதுகாக்கவும் தேவையான அறிவை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To download Pdf



Friday, July 12, 2024

பொதுக்காலம் 15ஆம் வாரம் – ஞாயிறு 14-07-2024

பொதுக்காலம் 15ஆம் வாரம் – ஞாயிறு 14-07-2024

பொதுக்காலம் 15ஆம் வாரம்

திருப்பலி முன்னுரை

திருமுழுக்கின் வழியாக இறைவனின் அழைப்பை பெற்று, இறைவனை தொழ இறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே!

கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் இறைவனின் அழைப்பை சிறப்பான முறையில் பெற்றுள்ளோம். தன்னுடைய அரும் அடையாளங்கள், போதனைகள், புதுமைகள் என அனைத்திலும் அன்பிற்கும், அனைவரையும் அணைக்கும் பண்பிற்கும் இறைமகன் இயேசு கிறிஸ்து முதன்மையான இடம் அளிக்கின்றார். தாம் விதைத்த அன்பின் விதையை, நாள்தோறும் பராமரிக்க தன்னுடைய சீடர்களை பணிக்கின்றார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இறைவனின் பணியை தொடர்ந்தாற்ற இயேசு கிறிஸ்து அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் இயேசுவின் பாதையை நம் பாதையாக்கிக் கொண்டு, இயேசுவின் போதனைகளை யாவருக்கும் கொண்டு செல்ல வேண்டும். இயேசு சொல்லால் நற்செய்தி அறிவித்ததை விட, தன்னுடைய செயலால் அதிக வலிமையுடன் நற்செய்தி அறிவித்தார். நாமும் நம்முடைய அயலாரிடத்தில் நமக்குள்ள வெறுப்பை விரட்டி, அவரோடு என்றும் நட்பு பாராட்டி இறைமகன் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அறிவித்த நற்செய்தியை தொடர்ந்து நம்முடைய செயல்களால் எடுத்துச் சொல்வோம். அதற்கு வேண்டிய இறை ஒளியையும், இறை ஞானத்தையும் பெற இந்த அன்பின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.


வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கு உரைப்பதும், நற்செய்தி அறிவிப்பதும் இறைவனின் பணி. இந்தப் பணியை மனித சக்திகள் தங்களுடைய வலிமையால் கட்டுப்படுத்த முடியாது. இறைவனே இறைவாக்கினர்களை தேர்ந்தெடுக்கிறார், அவரே இறைவாக்கினர்கள் மூலம் இறைவாக்குரைக்கின்றார் என்ற செய்திகளை கூறும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

தந்தை கடவுள் படைத்த இவ்வுலகை இறைவன் இயேசு கிறிஸ்து தன் ரத்தத்தின் பலனாக மீட்டெடுத்தார். மீட்டெடுத்த தன்னுடைய மக்களை தொடர்ந்து வழிநடத்த தூய ஆவியின் ஆசிகளால் அவர்களை நிரப்புகின்றார். நாமும் பாவத்திலிருந்து விடுபட்டு தூய ஆவியின் ஆசியை முழுமையாக பெறுவதற்காக இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பை ஆதாரமாகக் கொண்டு திருஅவையை நிறுவிய எம் இறைவா! திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் , நீர் விட்டு சென்ற செயல்வழி நற்செய்தி அறிவிப்பு பணியை இன்று போல் என்றும் தொடர்ந்தாற்ற தேவையான இறைவலிமையை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. அமைதியை நிலைநிறுத்தம் எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்து, மக்களுக்கு உகந்த முறையில் நிர்வாகம் செய்யவும், சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை நிவர்த்தி செய்யவும் தேவையான நிர்வாகத் திறனை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.


3. இறை திருவுளத்தை நிறைவேற்றுவதையே உணவாகக் கொண்ட எம் இறைவா! திருமுழுக்கினால் இறைவனின் அழைப்பு பெற்ற அனைவரும் இறைவனின் திருவுளத்தை அறிந்து, இறைவன் நமக்கென அளித்துள்ள பணியை சிறந்த முறையில் ஆற்றிட தேவையான மனதிடத்தை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆதரவற்றோரின் ஆதரவே இறைவா! குடும்பத்தால் விலக்கப்பட்டு இல்லங்களிலும், காப்பகங்களிலும் தங்கள் வாழ்நாட்களை கழித்துக் கொண்டிருக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு நீர்தாமே ஆறுதலாக இருந்து, அவர்கள் வாழ்வின் அனைத்து வேளைகளிலும் நிறைவு காண அருள் புரிய வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. திருப்பலியிலும், திருவழிபாட்டிலும் பங்கு கொள்ள முடியாமல் நோய் பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் எம் பங்கின் பெரியவர்களுக்காக மன்றாடுகின்றோம். ஆன்ம உணவாக உம்மை உட்கொள்ளும் அவர்கள் உன்னுடைய எல்லையில்லா வரங்களால் ஆசிர்வதிக்கப்பட்டு விரைவில் குணம் பெற அவர்களுக்கு தேவையான உடல் நலனை தந்தருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


 To download pdf




Friday, July 5, 2024

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு 07-05-2024

 பொதுக்காலம் 14-ம் ஞாயிறு 
07-05-2024 

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு  07-05-2024


திருப்பலி முன்னுரை

 வெறுமையான அப்பத்தையும், இரசத்தையும் கிறிஸ்துவின் திருவுடலாகவும், இரத்தமாகவும் மாற்றும் இவ்வுன்னத விருந்தில் பங்கேற்க வந்துள்ள சகோதர, சகோதரிகளே! நம் தாய்த் திருஅவையானது பொதுக்காலத்தின் 14-ம் ஞாயிற்று திருப்பலியை கொண்டாட நமக்கு அழைப்பு விடுகின்றது. கடவுள் உலகைப் படைத்தார். அவர் படைப்புகளின் சிகரமாக மனிதரைப் படைத்தார். அந்த மனிதன் பாவத்தில் விழுந்து மீளா முடியாமல் தவித்த பொழுது இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களின் வரிசையில் தன் ஒரே மகனான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மீட்பராக இவ்வுலகிற்கு அனுப்பினார். இவ்வாறு இறைவன் அனுப்பிய இறைவாக்கினர்களும், மெசியாவும் இவ்வுலகிற்கு எதற்காக அனுபப்பட்டார்கள் எனவும், அவர்கள் எவ்வாறு நமக்காக தங்களையே அளித்தார்கள் என்று சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. நம்முடைய முற்சார்பு சிந்தனைகள் புதிய தகவல்களை உள்ள வாங்க நமக்கு தடையாக உள்ளது. இறைவாக்கினர்களும், இயேசுவும் இன்ன பிற மகான்களும் இவ்வுலகில் பிறந்த பொழுது அவர்களை இவ்வுலகம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதற்கு காரணம் அவர்கள் மேல் மக்களுக்கு இருந்த முற்சார்பு எண்ணங்கள்தான் காரணம். பிற மனிதரிடத்திலும், இறைவனிடத்திலும் நாம் நெருங்கிய உறவு கொள்ள நம்மிடத்தில் அவர்களைப் பற்றிய முற்சார்பு எண்ணங்களை மறந்து, புதிய நேர்மறையான எண்ணங்களை கொண்டு அவர்களுடன் புதிய பயணத்தை தொடர்வதற்கு தயராக இருக்க வேண்டும். நமக்கும் பிறருக்கும், இறைவனுக்குமான உறவுகளை புதுப்பிக்க இந்த உறவின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.  


வாசக முன்னுரை 
முதல் வாசக முன்னுரை

  இறைவனை விட்டு விலகி சென்ற இஸ்ரேயல் மக்களை இறைவன் அப்படியே விட்டுவிடுவில்லை. அவர்களை இறைவழியில் நடத்த பல இறைவாக்கினர்களை அவர்களிடத்தில் அனுப்பினார். தாம் அறிவிக்க வேண்டிய வார்த்தைகளை இறைவாக்கினர்கள் மூலம் இஸ்ரேயல் மக்களிடத்தில் அறவித்தார். அவ்வாறு இறைவனின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இறைவாக்கினர்களின் முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

 நம் வலுவின்மையை நாம் எற்றுக்கொள்ளும் பொழுதுதான், அதைக் களைவதற்கான வழிகளை நாம் கண்டடைய முடியும். புனித பவுல் அடிகளார் தன்னுடைய குறைகளை ஒப்புக்கொண்டு, அதைக் களைவதற்கான வழிகளை இறைவனிடத்தில் பெற வல்லமை பெற மன்றாடுகின்றார். அவருடைய மன்றாட்டுகள் அடங்கிய இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.   


மன்றாட்டுகள் 


1. அன்பை ஆணிவேராக வைத்து நீர் உருவாக்கிய உம் திரு அவைக்காக மன்றாடுகின்றோம். இறைவாக்கினர்களும், மெசியாவும் எவ்வித தொய்வும் இன்றி இறைப்பணி ஆற்றியது போல உம் திரு அவையின் தலைவர்களும், உறுப்பினர்களும் தளராது இறைப்பணி ஆற்ற தேவையான மன திடத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம். 

 2. நல்ல மேய்ப்பனே எம் இறைவா! இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்கிறோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், தங்களுடைய வாழ்வின் சுயநல எண்ணங்களுக்காக மக்களை பயன்படுத்தாமல் இருக்கவும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

 3. நலம் தரும் நற்கருணை நாயகனே எம் இறைவா! இவ்வுலகில் நோய்களாலும், போர்களாலும் மற்றும் கொடிய இனவாதத்தாலும் பாதிப்படைந்து தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் மன்றாடுகிறோம். நீரே அவர்களை உம்முடைய பிள்ளைகளாக கருதி அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம் 

 4. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும் ஆன்மீக வாழ்வில் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம் 

 5. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களுடைய குறைகளை ஏற்று, இறைவழியில் நடந்து, இறைவனின் வல்லமையை பெற எங்களுக்கு தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம


To download pdf


by



தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...