இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, August 30, 2024

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு 01 – 09 - 2024

 பொதுக்காலம் 22-ம் ஞாயிறு 01 – 09 - 2024

Scroll down for pdf

** Thirupali Munnurai **

** Sunday Mass Introduction**

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு 01 – 09 - 2024

திருப்பலி முன்னுரை

உள்ளமென்னும் இறை இல்லத்தை புதுப்பிக்க, இறை வெள்ளமாய் திரண்டு வந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் 22-ம் ஞாயிறு வாசகங்கள் அனைத்தும் , நம்முடைய வழிபாடுகளும், வாழ்க்கையும் பதிவேடுகளோடும், பகட்டோடும் நின்று விடாமல், பண்பட்ட வாழ்வை நோக்கி பயணப்பட வேண்டுமென்ற இறை ஒழுங்கின் படி வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றது. உண்மையான ஞானம் இறைவனிடமிருந்தே வருகின்றது. அறிவாளிகள் இறைவனின் கட்டளைகளைப் கற்று, அவற்றை தங்களுடைய வாழ்வாக்குகின்றனர். அறிவிலிகள் ஏட்டில் உள்ள விதிகளை பிடித்து கொண்டு ஞானத்தை கடைசிவரை பெறாமலே செல்கின்றனர். இறைவன் நமக்கு தரும் உன்னதமான கட்டளைளில் முதன்மையானது பிறரிடத்தில் அன்புகாட்டுவது. எனவே, பிறரன்பு பணியில் ஈடுபடுபவரே ஞானமுடையோர். அன்புடையோர் பிறருக்கெதிராய் செயல்பட மாட்டார்கள். அன்னை தெரசா தன்னுடைய இறை ஞானத்தின் வெளிப்பாடாக நலிந்தவர்களிடத்தில் அன்பு பாராட்டினார். இன்னல்களின் மத்தியில் தன்னை எதிர்த்தவர்களுக்கும், இன்முகத்துடன் பணியாற்றினார். இதுவே, இறை வெளிப்பாடு. இதுவே இறைவன் அளிக்கும் ஞானம். ஆகவே, ஞானத்தை நமத்தாக்க அன்புப் பாதையில் பயணிப்போம். அன்பின் பலியில் இணைவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவனின் ஆசி பெற்ற பேரினமாய் திகழ, இறைவனின் கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும். எகிப்தின் பிடியிலிருந்து இஸ்ரேயல் மக்களை மீட்ட இறைவன், அவர்களுக்கு, நியமங்களையும், ஒழுங்குமுறைகளையும் அளித்து அவர்களை ஒரு பேரினமாக்கி, காத்து, வழிநடத்தும் நிகழ்வை எடுத்துக்கூறும் இம்முதல் வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவார்த்தைகளை அறிந்து, அதன்படி வாழ்வது வெறும் வாழிபாட்டில் மட்டும் பிரதிபலிக்கக் கூடாது. அது நம் வாழ்விலும் வெளிப்பட வேண்டும். இன்னலுறுபவர்களுக்கும், எளியவர்களுக்கு நாம் செய்யும் சேவையே, இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய சேவை என்ற இறைஞானத்தை தரும் இவ்விரண்டாம் வாசககத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. எளியவர்களின் இல்லமாக திரு அவையை உருவாக்கிய எம் இறைவா! உன் அன்பின் நீட்ச்சியாக நீர் ஏற்படுத்திய திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். எளியவர்களிடத்தில் அதிக அன்பு செலுத்தி, காயப்பட்ட ஆடுகளை தேடி அரவணைக்க தேவையான இறைவலிமையை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. உண்மைக்கு குரல் கொடுத்த எம் இறைவா! சமூகத்தில் உள்ள பிரச்சனைகளையும், அடக்குமுறைகளையும், நாங்கள் கண்டும் காணதது போல் இல்லாமல், நாங்களும் சமுகத்தின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து, எங்களுடைய சமுக பொறுப்புகளை ஆற்றிட தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. இயற்கையை ஆளுகை செய்யும் எம் இறைவா! நீர் நல்லதென கண்டு படைத்த இயற்கையை, நாங்கள் நல் முறையில் பாதுகாக்கவும், இயற்கையின் அசூர மாற்றங்கள் எங்கள் வாழ்வின் அன்றாட செயல்களை பாதிக்காமால், இயற்கையோடு நாங்கள் என்றும் இணைந்திருக்கும் அருள் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.

4. வார்த்தைக்கு வாழ்வளிக்கும் எம் இறைவா! இறைஞானம் பெற இறைப்பிடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும், பிறரன்பு பகிர்வில் வெறும் சொல் வீரர்களாய் மட்டும் இல்லாமல், செயல் வீரர்களாய் இருந்து, பிறரன்பு பணியில் ஈடுபட்டு இறைஞானத்தை எமதாக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. நொருங்கிய உள்ளத்தை பலியாக கேட்ட எம் இறைவா! பேராசை, தீச்செயல், வஞ்சகம், , பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்ற உள்ள அழக்குகளை அகற்றி, எங்கள் இல்லங்களை நாங்கள் அலங்கரிப்பது போல, எங்கள் உள்ளங்களையும் அலங்கரிக்கும் வரம் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.



To download pdf


No comments:

Post a Comment

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...