Thursday, February 27, 2025

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 02-03-2025

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 

02-03-2025

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 02-02-2025


திருப்பலி முன்னுரை

நல்ல உள்ளம் கொண்டவர்களின்; நன்மைத்தன்மை, அவர்களுடைய செயல்களாலே அறியப்படும். இறைவன் மீதும், தம் அயலாரின் மீதும் அன்பு கொண்டவர்கள் ஒருபொழுதும் தீங்கிழைக்க மாட்டார்கள். இருப்பினும், மனித பலவீனத்தால் ஏதேனும் தவறுகள் செய்துவிட்டால், அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பார்கள். இப்படி, தங்களிடத்;தில் உள்ள நம்மைத்தன்மைக்கு செயல் வடிவம் கொடுப்பார்கள். இதைத்தான் புனித பவுல் “செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்” என்று குறிப்பிடுகின்றார்.

இயேசு இவ்வுலகில் பிறந்து, இறைவனிடமிருந்து பெற்ற நன்மைத்தன்மையை யாவருக்கும் பகிர்ந்தளித்தார். தம்முடைய சீடர்களையும் அவர் வழி பின்பற்றி நன்மையை உலகெங்கும் எடுத்துச்செல்ல பணித்தார். அதுபோல, இறைவனின் உண்மையான சீடர்களும் நற்செயல்கள் புரிவதில் ஆர்வம் காட்டுவார்கள். எனெனில், நம்முடைய செயல்களை பொறுத்தே நமமுடைய விசுவாசமானது அறியப்படுகின்றது. இயேசுவின் சீடர்களாக நாம் இருக்க வேண்டுமென்றால் அதற்குரிய பண்புகளையும், செயல்களையும் நாம் கொண்டிருக்க வேண்டும். 

நம்முடைய எண்ணத்தால், வார்த்தையால், சொற்களால் மற்றும் செயல்களால் நம்மிடையே உள்ள நல்லவைகளை பன்மடங்கு பெருக்கி, அதை பன்மடங்கு பிறருக்கு உதவும்படி செய்ய தேவையான ஆற்றல்களை வேண்டி இந்த ஆன்மீக விருந்தில் அர்பணிப்புடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

ஒருவரின் வாயிலிருந்து உதிர்க்கும் வார்த்தைகளும், அந்த வார்த்தைகளோடு பொருந்திய அவருடைய செயல்களுமே, அம்மனிதரின் உள்ளத்து அறைகளின் அழகை இவ்வுலகுக்கு எடுத்துரைக்கின்றன. எனவே, நாம் உதிர்க்கும் வார்த்தைகளுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னரை

இவ்வுலகின் மீது ஆளுகைப் புரிந்து கொண்டிருந்த பாவத்தையும், அதனால் விளையும் சாவையும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெற்றிக்கொண்டார். அவருடைய சீடர்களாகிய நாமும், பாவத்தை விடுத்து சாவை வெற்றி கொள்ள முடியும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கைக் கொண்டு பாவத்துக்கிற்கு எதிராக வாழ அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. அன்பு தந்தையே இறைவா, திருஅவையை கட்டி எழுப்ப நீர் தேர்ந்தெடுத்த எம் திருதந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் இருபால் துறைவியருக்காக செமிக்கிறோம். தங்கள் வாழ்வில் வரும் சோதனை, இன்னல்கள் மற்றும் தடைகளை கண்டு தடம் மாறாமல். நல்ல கனி தரும் மரங்களாக வளர தேவையான அருளை பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 


2. வழிநடத்தும் வள்ளலே எம் இறைவா, எம் நாட்டு தலைவர்களை ஆசிர்வதிக்க வேண்டுகிறோம். தன்னலனில் அக்கறை கொள்ளாமல் பிறர் நலன் நாடவும், மக்களின் அன்றாட தேவையை உணர்ந்து, அவர்களை வழிநடத்த தேவையான ஞானத்தையும், முன்மதியையும் தர வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.


3. நல்ல ஆயனே இறைவா, இன்றைய உலகில் மக்கள் படும் துன்பங்களை உம் கருணை கண் கொண்டு பாரும். போர்களாலும், இயற்கை சீற்றத்தாலும் பாதிக்கப்பட்டு நிம்மதியற்று வாழும் மக்களுக்காக வேண்டுகிறோம். அன்பு, அமைதி, மன்னிப்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் போன்ற பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து வாழ வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 


4. உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்று மொழிந்த ஆண்டவரே. இத்திருப்பீடம் சூழ்ந்துள்ள அனைவரையும் உம் பாதம் அர்பணிக்கின்றோம். நாங்கள் அனைவரும் உம் ஆற்றலுள்ள இறைவார்த்தையை எங்கள் உள்ளத்தில் பதித்து, அதனை  எங்கள் அன்றாட வாழ்வில் பிறரோடு பகிர்ந்து வாழ் அரம்தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. குணமளிப்பவரே எம் இறைவா! தொடர் உடல் நல பின்னடைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருத்தந்தை அவர்களுக்காக மன்றாடுகின்றோம். கிறிஸ்துவை இவ்வுலகில் பிரதிபலித்து, மக்களின் திருந்தந்தையாக திகழ்ந்த எம்முடைய திருந்தந்தை விரைவில் குணமடைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 


To Download PDF


Thursday, February 20, 2025

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு 23-02-25

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு 

23-02-25

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு  23-02-25


திருப்பலி முன்னுரை 

இறை இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்டு இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிற்றின் திருப்பலி வாசகங்கள் அனைத்தும் நம்மை அன்பு செய்யவும், நம் அன்பை பிறரோடு பகிர்ந்து வாழவும் அழைக்கிறது. பகைவரையும் அன்பு செய்யுங்கள் என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தை நம்மை சிந்திக்க வைக்கிறது. அன்பு செய்பவரையே பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், நம் பகைவரையும் வெறுப்போரையும் எவ்வாறு பொறுத்துக் கொண்டு, அன்பு செய்வது? என்ற கேள்வியை நம்மை நோக்கி நாமே எழுப்புவோம். நம்மிடையே நம்முள் ஒருவராக பிறந்து, வளர்ந்து மற்றும் பாடுபட்டு இறந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறரன்iபு வெறும் வார்த்தைகளால் அல்லாமல் தம் தினசரி வாழ்க்கையால் வாழ்ந்தும் காட்டினார். 

அன்பே இறைமகனாம் இயேசுவின் சாயலாகும். அவரின் சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரைப்போல வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் உள்ளத்தில் கோபம், பழிவாங்கும் எண்ணம் மற்றும் பொறாமை பெருகும் பொழுது அவற்றை தூக்கு எரிந்து விட்டு அன்பு, மகிழ்ச்சி, பொறுமை என்னும் தூய ஆவியின் கனிகளை அச்சாணியாக கொண்டு நம் வாழ்வை புதுப்பிப்போம். 

"நாளை நாளை எண்ணாதே நாளை வீணில் களிக்காதே

நாளை செய்யும் காரியத்தை இன்றே செய்து முடித்திடுவாய்!"

என்பதற்கேற்ப நாளை என ஒதுக்காமல், இன்றே நல்லதை செய்ய தொடங்குவோம். பகைவரை அன்பு செய்து, வெறுப்போருக்கு நன்மை செய்து, சபிப்போருக்கு ஆசி கூறி மற்றும் இகழ்வோரை மன்னித்து வாழும் நல் மனம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை 

தன்னை கொலை செய்ய வந்த சவுலை பழிதீர்க்க தாவீதுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தாவீதோ "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கைவைக்கமாட்டேன் என்று கடவுள் மேல் உள்ள அன்பையும், பத்தியையும் வெளிப்படுத்தினார். அன்பு எங்கு உள்ளதோ அங்கே மன்னிப்பு இருக்கும். தாவீதைப் போல மன்னித்து வாடி வரம் வேண்டி இ;ம்முதல் வாசகத்திற்கு பக்தியோடு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பவுல் கொரிந்து மக்களுக்கு கடவுளின் சாயலையும், மனிதனரின் சாயலையும், அவர்களின் இயல்பையும் இந்த இரண்டாம் வாசகம் வழியாக எடுத்துரைக்கிறார். முதல் மனிதன் ஆதாம் மண்ணிலிருந்து உருவாக்கப்பெற்றார். மண்ணக சாயலைக் கொண்டார். ஆனால் இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். விண்ணக சாயலை கொண்டவர். இம்மண்ணக, விண்ணக சாயலின் விளக்கங்களை அறிந்து கொள்ள உதவும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. உம் எல்லையில்லா அன்பின் அடையாளமாக திரு அவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், உம்மைப் போல தங்களிடத்தில் உள்ள அனைத்தையும் பிறரோடு பகிர்ந்து கொண்டு வாழும்; தாராள மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! போதிய உணவு, உடை, உறைவிடமின்றி வறுமையால் வாடும் அனைவரையும் அரவணைக்கும்படி மன்றாடுகின்றோம. இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டிய மனப்பக்குவத்தை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம். 

3. எங்களை அதிகமாய் அன்பு செய்யும் இறைவா! உலகெங்கும் வெவ்வேறு வழிகளில் உம்முடைய நற்செய்தி அறிவிப்பு பணியை, சமூக நல சேவைகள் மூலம் ஆற்றி வரும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளை தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

4. குழந்தைகளை அன்பு செய்த எம் அன்பு இறைவா! எங்கள் வீடுகளில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பகிர்வின் மேன்மையை எங்களுடைய செயல்களால் எடுத்துச் சொல்லவும். பிறரன்பு பகிர்வின் பாதையில், அவர்களை; நன்முறையில் வளர்த்திட வேண்டிய ஞானத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. தலைமை குருவே எம் இறைவா! நீர் ஏற்படுத்திய நற்செய்தி பணியை இவ்வுலகில் தொடர்ந்து ஆற்ற, தேவையான இறை அழைத்தல்களை தந்தருள வேண்டுமென்றும், சிறப்பான முறையில் எங்கள் பங்கில் இறை அழைத்தலை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.


Thursday, February 13, 2025

பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு – 16-02-25

பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு 

16-02-25

பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு – 19-02-25

                                    இயேசுவின் மலைப் பொழிவு


திருப்பலி முன்னுரை

இவ்வுலக மக்களாகிய நாம் செல்வமாக கருதுபவை யாவும் இறைவன் முன்னிலையில் மதிப்பற்றதாகின்றது. எனவே, உலக செல்வத்தை சேர்ப்பதால் இறைவன் தரும் நிலைவாழ்வை நாம் உடமையாக்கிக் கொள்ள முடியாது. இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசங்களும் இறைவன் தரும் நிலைவாழ்வை பெறுவதற்காக தகுதியாக்கிக் கொள்ள நமக்கு அழைப்புவிடுகின்றது. அதிலும் சிறப்பாக, இன்றைய நற்செய்;தியில் இடம் பெற்றுள்ள மலைப்பொழிவு வாசகத்தில் இறைவன் அளிக்கும் விண்ணக இன்பத்தை யார் அடைவார்கள் என்று இயேசுவே பட்டியலிடுகின்றார்.

ஏழைகளையும், நோயளிகளையும் மற்றும் துன்புறுவோரையும் பாவிகள் என்று கருதி இவ்வுலகு வெறுத்த வேளையில், இவர்களுக்கே விண்ணகம் உரியது என்று இயேசு கிறிஸ்து மொழிந்த பொன்மொழிகளை நம்முடைய வாழ்வாக்கி, இறைவன் தரும் நிலையான பெருமகிழ்வில் பங்குகொள்ள நமக்கும் அழைப்பு விடுகின்றார். எளிய இறை நம்பிக்கையின் மூலம், இறைவனின் பிள்ளைகளாகிய அனைவருக்குமாக நாம் வாழ்வோமெனில், இறைவன் நம் இதயத்தில் குடிகொள்ளவார். எனவே, எளிய மனம் கொண்ட இயேசுவின் சிடர்களாகிய நாம் அனைவரும் ஏழைக்களுக்காகவும், துயருவோருக்காகவும் செபிக்க இந்த எளிமையான விருந்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவனை தவிர்த்து, இவ்வுலக செல்வத்தின் மீதும். மனிதர்களும் மீதும் நம்பிக்கை வைப்போமெனில் இறைவன் தரும் மீட்பை நம்மால்; பெற முடியாது. எனெனில், அனைத்தையும் படைத்த நம்முடைய இறைவனே நம்மை காக்க வல்லவர். எனவே, இறைவனில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர் என்றும், நீர் அருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பார்கள் என்று கூறும் இறைவாக்கினர் எசாயா அவர்களின் இறைவாக்கிற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து இவ்வுலக மக்கள் அனைவரின் பாவங்களுக்காகவும் இறந்தார். இறந்த இயேசு கிறிஸ்து இறப்பை வென்று, மீண்டும் உயிர்தெழுந்தார். எனவே, அவருடைய சகோதர, சகோதிரிகளாகிய நம்மாலும் பாவத்தை விலக்கி, சாவை வெற்றி கொள்ள முடியும். கிறிஸ்துவோடு இணைந்திருப்போமெனில், கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம் என்ற உயிர்ப்பின் வார்த்தைகள் அடங்கிய இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம். 


மன்றாட்டுகள்

1. எழை, எளியோரின் வாழ்வை நலமாக்க திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைரும் உலக செல்வத்தில் நாட்டம் கொள்ளாமல், விண்ணகச் செல்வத்தை சேர்ந்து இறைவன் தரும் நிலைவாழ்வை உடமையாக்கிக் கொள்ளவதற்கான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. எழைகளே, நீங்கள் பேறுபெற்றோர் என்று மொழிந்த எம் இறைவா! எங்களிடத்தில் தேவைக்கு மிகுதியாக உள்ளவற்றை பிறருடன் பகிர்ந்து கொண்டு, ஏழைகளின் துயர் துடைக்கவும், அவர்களின் வாழ்வு மேன்மையடைய தேவையான நல உதவிகளை நாங்கள் அவர்களுக்கு செய்திட தேவையான நல்ல மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காக மரித்த எம் இறைவா! நாட்டின் எல்லைகளிலும்; மற்றும் எங்கள் மத்தியிலும்; உயிர்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடும் வீரர்களுக்காகவும், மருத்துவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் செய்யும் பணியை நிறைவாக ஆசிர்வதித்து, அவர்களுடைய பணியை கவனமுடன் ஆற்ற அவர்களுக்கு தேவையான அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் இருப்பிடமே எம் இறைவா! இறைவனாகிய உம்மாலே நாங்கள் அனைவரும் மீட்பு பெறுகின்றோம் என்பதை உணர்ந்து, விண்ணக வீட்டை எங்கள் இல்லமாக மாற்ற விண்ணகச் செல்வத்தை சேர்க்க வேண்டிய ஆற்றலை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்றும், அதற்காக எம்மையே நாங்கள் தகுதியாக்கிக் கொள்ள தேவையான அருள் வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. தேடிச் சென்று உதவும் இறைவா! பல்வேறு பிரச்சனைகளால் காப்பகங்களில் இருக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை நாங்கள் செய்யவும், எங்கள் இல்லங்களில் உள்ள குறைபாடுள்ளவர்களை நன்றாக கவனித்து கொள்ளதற்கும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.




Sunday Mass Introduction
Catholic Mass 
Tamil Mass Introduction

Wednesday, February 5, 2025

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு 09-02-25

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு 

09-02-25

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு  09-02-25

திருப்பலி முன்னுரை

இறைவனுடைய பணி குருத்துவத்திலும், பொது குருத்துவத்திலும் பங்கேற்று இறைவனின் ஆசிர் பெற வந்துள்ள சகோதர, சகோதரிகளே!

இறைவன் தன்னுடைய மக்களுக்காக எண்ணற்ற இறைவாக்கினர்களையும், நீதி தலைவர்களையும், அரசர்களையும், ஞானிகளையும் அனுப்பி மீட்பின் பாதையில் பாதையில் அவர்களை நடத்திச் சென்றார். புதிய ஏற்பாட்டில் தாழ்ச்சியை ஆடையாக அணிந்து இறைமகன் இயேசு கிறிஸ்துவே நம்மை வழி நடத்துவதற்காக மண்ணகத்தில் மனிதராய் பிறந்தார். மண்ணகத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து தனக்குப்பின் திருஅவையையும் மற்றும் இவ்வுலக மக்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்வதற்கு திருத்தூதர்களையும், சீடர்களையும் ஏற்படுத்தினார்.

பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறாகிய இன்று நமக்கு தரப்பட்டுள்ள அனைத்து வாசகங்களும் இறைய அழைத்தலை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இறைவனே, திருஅவை என்னும் இத்திராட்சை தோட்டத்தின் உரிமையாளர். நாம் அனைவரும் அதில் பணிபுரியும் பணியாளர்கள். எனவே நாம் இறைவனின் பணியில் இறைவனோடு பங்கேற்கின்றோம். என்ற மனநிலையை பெற வேண்டும். அன்று தன்னுடைய பணிக்காக இறைவாக்கினர் எசாயாவை, புனித பேதுரு மற்றும் பவுலை அழைத்த இறைவன் இன்று நம்மையும் அழைக்கின்றார். 

இறைவனின் வார்த்தைகள் அடங்கிய திருவிவிலியத்தை நன்குணர்ந்து, இயேசு காட்டிய இறையன்பு மற்றும் பிறரன்பு பாதையில் பயணித்து, இயேசுவின் உண்மை சீடர்களாக திகழ இந்த அழைப்பின் விருந்தில் பெரு மகிழ்வுடன் பங்கு கொள்வோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் இறைவாக்கினர் எசாயாவை தனது பணிக்காக அழைக்கின்றார். இறைவாக்கினது எசாயா தன்னுடைய இயலாமையும், அசுத்த தன்மையையும் இறைவன் முன் வைக்கின்றார். ஆனால், இறைவன் அவரை மாசற்றவராக மாற்றி இறை பணிக்காக தன்னுடன் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு விளக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்தவர்களை தன் வாளால் வெட்டி வீழ்த்திய சவுல், கிறிஸ்துவின் மூலம் மன மாற்றம் பெற்று புனித பவுல் ஆக மாறுகின்றார். திருத்தூதர்களில் கடைசியானவராகிய புனித பவுல் தன்னுடைய அழைப்பை பற்றி கூறும் வார்த்தைகள் அடங்கிய இவ்வாசகம்; நம்மை இறைபணிக்காக அழைக்கின்றன என்ற மனதிடத்துடன் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. உலகை மீட்க வந்த எம் இறைவா! நீர் விட்டு சென்ற மீட்பின்; பணியை இவ்வுலகத்தில் தொடர்ந்த ஆற்றும் திருஅவையின்; அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் அனைவரும் இறைவனின் பாதையில் தொடர்ந்து பயணித்து இறைவனின் அழைப்பில் என்றும் நிலைத்திருக்க தேவையான அருள் வரங்களை தந்தருள் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


2. உண்மைக்கு உயிர் கொடுக்கும் என் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்களும், அதிகாரிகளும் தங்களின் பொறுப்புகளை நன்குணர்ந்து, தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை கடமையுடன் ஆற்றவும், லஞ்சமற்ற நேர்மையான சமுதாயத்தை உருவாக்க வேண்டிய நல்ல மனதையும் தந்தருள வேண்டும் என்று உண்மை மன்றாடுகிறோம்.


3. இறைப் பணியில் இன்புற்ற  எம் இறைவா! திருஅவையின் நலனுக்காக உழைக்கும் அனைத்து பொதுநிலையினருக்காகவும் மன்றாடுகின்றோம். பாடகர் குழு. பீடச் சிறுவர்கள். வேதியர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள், ஆலய தூய்மை பணியாளர்கள் மற்றும் இன்ன பிற பணிகளை புரியும் அனைவருக்கும் நிறைவான ஆசீரளித்து அவர்கள் உள்ளமும், இல்லமும் அன்பால் நிரம்பிட வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


4. அறுவடைக்கு வேண்டிய வேலை பணியாளர்களை அனுப்பும்படி மன்றாட எம்மை பணித்த எம் இறைவா! இறைவனை அழைப்பு ஏற்று, பணிக்குருத்துவதற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அனைத்து அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். அதிலும், சிறப்பாக எம் பங்கில் பணிபுரியும் அருள் தந்தையர்களையும், கன்னியர்களையும் நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இறைப்பணியில் மென்மேலும் வளர தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. நோயாளிகளை குணமாக்கிவரே எம்; இறைவா! சமூக நல சேவைகளையும், சமூக மாற்றத்தையுமே தங்கள் முழு மூச்சாக கொண்டு உழைக்கும் அனைத்து உள்ளங்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற்று சமூக நோய்களையும், சமூக அநீதிகளையும் வேரறுக்க தேவையான வல்லமை இவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...