திருப்பலி முன்னுரை
இறைவனின் பிறப்பில் மகிழ்வில் பங்கு கொள்ள, தங்களையே தயார் செய்ய வந்துள்ள சகோதர சகோதரிகளே! நாம் அனைவரும் இன்றைய நாளில் திருவருகை காலத்தின் நான்காம் வாரத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம். திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு அன்பு என்ற இறை பண்பை மையமாக வைத்து நம்மை சிந்திக்க அழைக்கின்றது. இறைவன் தன்னுடைய அன்பை படைப்புகள் வாயிலாக வெளிப்படுத்துகின்றார். மனிதன் தவறிழைத்து தவறிச் சென்ற வேளையிலும் இறைவன் ஒரு பொழுதும் அன்பு செய்யத் தவறியதில்லை. அந்த அன்பின் உச்சமாக தன்னுடைய ஒரே மகனை இவ்வுலகிற்கு அளித்தார். தந்தையின் வலப்புறம் வீற்றிருந்த இறை மகனும் மனித உருவில்; குழந்தையாய் நமக்காக பிறந்தார். இறைவன் ஏற்றுக் கொண்ட இத்துன்பங்கள் வழியாக நம் மீது அவர் கொண்ட அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார். இதைத்தான் அன்னை தெரசா அவர்கள், நம்மிடத்தில் உள்ளவற்றை அன்பு மிகுதியால் பகிரும் பொழுது, நாம் துன்பப்படும் வரை அதை நிறுத்த கூடாது என்கின்றார். இறைமகன் இயேசு தாழ்ச்சியை தனதாக்கிக் கொண்டு இறை நிலையை விட்டு மனித நிலையை ஏற்றதற்கான ஒரே காரணம் அவர் நம் மீது கொண்ட அன்பு. நாமும் தாழ்ச்சியை நமதாக்கிக்கொண்டு, பிறருக்கு உதவும் வகையில் இயேசு காட்டி அன்பின் பாதையில் பயணிக்க இந்த அன்பின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
எப்ராத்தா, பெத்லகேமிலிருந்து இஸ்ரயேலின் மீட்பரும் உலகின் ஆண்டவரும் தோன்றுவார் எனக் கூறுகின்றன. மீட்பரின் வருகை அமைதியும் மீட்பும் தரவல்லது. எளிய சிறு இடத்திலிருந்து சிறியதாய் தோன்றும் இறைவன் எண்ணற்ற பல மாற்றங்களை ஆற்ற வல்லவர் என்ற நமபிக்கை அளிக்கும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இயேசு கிறிஸ்துவின் வருகையால் பழைய ஏற்பாட்டின் பலிகளுக்குப் பதிலாக ஒரு புதிய ஏற்பாடு உருவாகியது. எபிரேயருக்கு எழுதிய இந்த வசனங்கள் கிறிஸ்துவின் தியாகத்தால் இறைவனின் திருவுளம் நிறைவேறி, மனிதர்கள் தூய்மையடைந்ததை அறிவிக்கின்றன. மீட்புப் பெறுவதற்கான வழிகளைக் கற்பிக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
- பரிபூரண அன்பை பொழியும் எம் இறைவா! உம் அன்பின் போதனைகளை உலகெங்கும் கொண்டு சென்றிட நீர் ஏற்படுத்திய திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும், உம்முடைய பிறப்பிற்காக தங்களை தயார் படுத்தவும், தங்களிடம் உள்ள உயர்ந்த பண்புகளை பிறருக்கு உகந்த வகையில் பயன்படுத்திடவும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- அன்பின் ஆழத்தை எங்களுக்கு காட்டிய எம் இறைவா! எங்களிடத்தில் உள்ள அனைத்து அன்புகளும், எங்களுடைய பகிர்வின் வாயிலாக வெளிப்படவும், உம்மையே நாங்கள் முன் மாதிரியாக கொண்டு, அன்பின் பிரதிபலிப்பாக மாறாவும், நீர் காட்டும் அன்பின் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யவும் தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறiவா! சிரியாவிலும்; மற்ற உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைதியான வாழ்வளிக்கவும், இந்த நிலையை எதிர்கொள்ள உம்முடைய அமைதியும் அன்பையும் பொழிந்து, நீரே அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்று எம்மை மன்றாடுகின்றோம்.
- அனைவருக்கும் ஆறுதலளிக்கும் எம் இறைவா, இயற்கை பேரழிவுகளால் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, அவர்களின் இயல்பு வாழ்க்கை;க்கு மீண்டும் திரும்பிட தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- தேடிச் சென்று உதவும் உம் இறைவா! உலகெங்கும் பொருளாதார நெருக்கடிகளாலும், வறுமையாலும் வாடும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை ஆற்றிட வேண்டிய நல்ல மனதையும், சமமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி எம் சமுகத்தை வழிநடத்திட வேண்டிய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.





