கிறிஸ்து பிறப்பு திருப்பலி - 2025
திருப்பலி முன்னுரை
உன்னத்தின் இறைவன்
விண்ணகத்தின் அரியணை துறந்து
மண்ணகத்தின் மடியினில் தவழ
நம்மிடையே மலர்ந்துள்ளார்.
கிறிஸ்து பிறப்பின் பெருமகிழ்வில் கலந்திட இறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே !
உன்னதத்தின் மாட்சமிகு இறைவன், மண்ணகத்தில் இறை ஆட்சியை நிறுவ மனிதராய் நம்மிடையே பிறக்கும் நன்னாளே, கிறிஸ்துமஸ் பெருநாள். நம்மைப் படைத்த இறைவன் தம்முடைய அன்பை, அன்றாட வாழ்வின் கொடைகள் மூலம் நமக்கு வெளிப்படுத்துகின்றார். நம்மை தம் கண்ணின் மணிபோல காக்கும் அதே இறைவன், அன்பின் மிகுதியினால் தன்னையே இத்தரணிக்கு தானமாக அளித்தார். கடவுள் நிலையை இறுகப்பற்றிக் கொள்ளாமல் இறையியல்புடன் கூடிய, குறை நிறைந்த மனிதராக இம்மண்ணில் பிறக்கின்றார்;. இருப்பினும், இறையியல்பு மற்றும் இறை வேண்டலின் ஆற்றலுடன் குறைவுடைய மனித வாழ்வை நிறைவுள்ள வாழ்வாக எப்படி மாற்ற முடியும் என்று தன் வாழ்வால் அறிவித்தார். பிறரன்பு, தாழ்ச்சி மற்றும் இறை வேண்டல் மூலம் நம்முடைய வாழ்வின் போக்கை போற்ற மாற்ற முடியும் என்ற நமக்கு எடுத்துகாட்டுகின்றார்;.
மனிதராய் பிறந்த இயேசு மாளிகையைத் தேர்ந்துகொள்ளவில்லை, மாட்டிடைக் குடிலைத் தேர்ந்துகொண்டார். அரசர்களுக்கு ஆசி வழங்கவில்லை, ஆநிரை காக்கும் ஆயர்களுக்கே காட்சியளித்தார். ஏனெனில், கிறிஸ்து ஏழைகளையும், ஏழ்மையையம் மற்றும் எளிமையையும் தன் வாழ்வாக கருதினார். இறை வேண்டலின் துணையுடனும், எளிமையின் பலமுடன் பகிர்வின் மூலம் பிறரன்பை போதித்தார்.
எனவே, இயேசு பாலனின் பிறப்பு நம்மிடத்தில் இருக்க வேண்டிய தாழ்ச்சியையும், நாம் பிறரிடத்தில் கொள்ள வேண்டிய அன்பையும் கற்பிக்கின்றது. இயேசு இவ்வுலகத்தின் உணவாக தீவனத்தொட்டில் பிறந்து தன்னுடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஆந்த அன்பை பெற்று, அதை பிறருடன் பகிர அழைக்கும் இப்பெருமகிழ்வின் கொண்டாட்டத்தில் இணைவோம்! மகிழ்வோம்.
வாசக முன்னுரைகள்
இரவு திருப்பலி
முதல் வாசக முன்னுரை (எசா 9 : 2-4, 6-7)
தொடர் போர்களாலும், பஞ்சத்தாலும் வாடிய இஸ்ரேயல் மக்களை எதிர்வரும் மீட்பரின் வருகைக்காக தயார் செய்யும் இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்குகள் இன்றைய முதல் வாசக்கத்தில் இடம் பெற்றுள்ளது. நாம் செய்த பாவத்தால், இறைவன் நம்மை கைவிட்டுவிட்டார் என்று துவண்டு கிடந்த இறைவனின் மக்களை, அவர்களுக்காக புதிதாக தோன்றவிருக்கும் புது அரசர் நினைத்து மகிழ்ந்து அக்களிக்க அழைக்கும் இம்முதல் வாசகத்திற்கு ஆவலுடன் செவி கொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை ( தீத் 2 : 11-14)
இறைமகன் இயேசுவின் போதனையால் ஈர்க்கப்பட்ட பலர், கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்து வாழ்ந்தனர். இயேசுவின் பாதைகளை தமதாக்கிக் கொண்டு பயணிக்க தொடங்கினர். இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெற்றனர். அவ்வாறு திருமுருக்கு பெற்ற அனைவரும், இறைவன் மீது எவ்வாறு பற்று கொள்ள வேண்டும் என்று கற்பிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
பகல் திருப்பலி
முதல் வாசக முன்னுரை (எசா 52 : 7-10)
இறைவன் தம் இறைவாக்கினர்கள் மூலம் அளித்த இறைவாக்குக்கள் ஒருபோதும் பொய்த்ததில்லை. தன்னுடைய மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், அவர்களை மீட்பின் பாதையில் வழிநடத்திச் செல்லவும் அவர்களுக்கென்று ஒரு அரசரை அனுப்பிய இறைவன் தம் இறைவாக்கினர்கள் மூலம் வரவிருக்கும் மீட்பரைப் பற்றி முன்னுரைக்கின்றார். எனவே, மீட்பரின் வருகைப் பற்றியும், அவரின் வலிமையைப் பற்றியும் இம்முதல் வாசம் அளிக்கும் விளக்கங்களுக்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை (எபி 1 : 1 – 18)
இறைவன் பழைய ஏற்பாட்டில பல்வேறு வடிவங்களிவும், இறைவாக்கினர்களின்; மூலமாக மக்களிடம் உறையாடினார் தன் அன்பின் மிகுதியால் மனித உருவெடுத்து மக்களிடையே மனிதராக தோன்றிய இறைமகன், வானதூதர்களை விட மேலானவர். இறையாட்சியை நிறுவியதன் வழியாகவும், தாம் கொண்டுள்ள இறை இயல்பின் காரணமாக தந்தையின் மகனாக இயேசு விளங்குகின்றார் என்ற மறையுண்மையை உணர்த்தும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.


