கிறிஸ்து அரசர் திருவிழா (23-11-2025)
திருப்பலி முன்னுரை
இறையரசின் பெருமகிழ்வு கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்துள்ள சகோதர, சகோதரிகளே! மனிதர்களாகிய நம்மிடத்தில் மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றியதன் மூலம் இறப்பின் மீது வெற்றி கொண்டு இறையரசிற்கு அடித்தளமிட்டார். அவருடைய அன்புக் கட்டளைகளை கடைபிடித்து இறையரசின் மக்களாக வாழ நம்மையும் அழைக்கின்றார்.
கிறிஸ்துவின் இறையரசு இம்மண்ணகத்தைச் சார்ந்தது அல்ல. இம்மண்ணக இறையரசைப் போன்று நிலப் பலத்தையும், செல்வத்தையும் முன்னிறுத்தக் கூடியதல்ல. இறையரசின் வருகையானது நம்முடைய தன்னலமற்ற வாழ்வில் மையம் கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இறையரசை எதிர்நோக்கியிருப்பது என்பது காணாத ஒன்றுக்காக காத்திருப்பதில்லை. உண்மையில், அனைத்தையும் படைத்த இறைவனையும், இறைவன் படைத்த அனைத்தையும் நாம் அன்பு செய்யும் பொழுது நம்மிடையே இறையரசு நிலைநிறுத்தப்படும்.
எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இவ்-ஜீபிலி ஆண்டில் பயணிக்கும் நாம் அனைவரும் நம்முடைய பயணத்தின் பலனாக அன்பு கொண்ட, நம்முடைய கனிந்த உள்ளதை கிறிஸ்து அரசருக்கு காணிக்கையாக்க வேண்டும். திருமுழக்கின் வழியாக கிறிஸ்துவில் பங்கேற்கும் நாம், இறையரசை எதிர்நோக்கிய நம்முடைய பயணத்தை இறைவனின் அன்புக் கட்டளைகளை பின்பற்றுவதன் வழியாகவே அர்த்தமுள்ளதாக்க முடியும். எனவே, கிறிஸ்துவின் இறையரசில் பங்கேற்ற கிறிஸ்வின் படிப்பினைகளை குறைவின்றி கற்று, அதை நம்முடைய வாழ்வாக்க தேவையான வரங்களை வேண்டி கிறிஸ்து அளிக்கும் இக்கொண்டாட்டத்தில் பெருமகிழ்வுடன் பங்கேற்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
இஸ்ரேயல் மக்களை ஆசிர்வதித்த இறைவன் அவர்களுக்கு பல்வேறு ஆசிர்வாதங்களை வழங்கினார். அவர்களின் இன்னல் வேளைகளில் அவர்களுக்கு பல்வேறு இறைவாக்கினர்களையும், அரசர்களையும் அளித்துள்ளார். இருப்பினும், இறைவனே அவர்களை ஆட்சி செய்யும் அரசராக என்றும் இருக்கின்றார். பழைய இஸ்ரேயலை ஆட்சி செய்த இறைவனை இஸ்ரேயலை எவ்வாறு வழி நடத்தினார் என்று கூறும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
தொடக்கத்தில் பாவத்தில் வீழ்ந்த மானிடத்தை மீட்க இறைவன் பல்வேறு இறைவாக்கினர்களை அனுப்பினார். இறுதியில், தன்னுடைய மகனை இவ்வுலகின் தலைப்பேறாக அனுப்பினார். அப்படி மனிதராகவும், இறைவனாகவும் நம்மிடையே தோன்றிய கிறிஸ்துவே, திருச்சiயின் உடலுக்கு தொடக்கும், தலையுமாக இருக்கின்றார் என்று விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. இறையாட்சியை நிறுவ திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! இறையரசை நிறுவும் நோக்குடன் செயல்படும் உம் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் அனைவரும் இறையரசை நிறுவுவது என்பது எங்களுடைய அன்பை பிறரருன் பகிர்வது என்பதை புரிந்து கொண்டு, அன்பு வாழ்வால் திருஅவையை கட்டியெழுப்ப தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. அரசர்களுக்கெல்லாம் அரசரே எம் இறைவா! மக்களை ஆளும் தலைவர்கள் அனைவரும் தங்களின் சுயநலம் பாறாமல், கிறிஸ்து அரசரைப் போல பிறர்நலனைப் பேணவும், மக்களிடம் உள்ள பாகுபாடுகளைக் களைந்து, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பை போதித்த எம் இறைவா! கிறிஸ்து அரசின் இறையாட்சி மதிப்பீடுகளான இறையச்சம், பிறரன்பு மற்றும் எற்றுக்கொள்ளல் ஆகியவை எங்கள் இல்லங்களில் என்றும் நீடித்திருக்கவும், கிறிஸ்து அரசின் குடிமக்களாக நாங்கள் எங்கள் இல்லங்களிலும், சமுதாயத்திலும் வாழவும் வேண்டிய வரங்களை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஏழ்மையை நீக்க வந்த எம் இறைவா! போர்களாலும், தவறான பொருளாதார கொள்கைகளாலும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் அனைவரின் வாழ்வையும் நீரே மேம்படுத்த வேண்டும், அவர்கள் வாழ்வின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.