Friday, November 15, 2024

பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு 17-11-24

பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு 

17-11-24

பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு 17-11-24

திருப்பலி முன்னுரை

ஒவ்வொரு நாள் திருப்பலி கொண்டாட்டமும் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மை தயார் செய்கின்றது. நம்மை பாவத்தின் பிடியிலிருந்து மீட்பதற்காக இம்மண்ணுலகில் மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களை தன் மீது சுமந்து, பாவம் போக்கும் செம்மறியாக நம் பாவங்களை நீக்கினார். இறை வல்லமையால் இறப்பினை வென்று விண்ணகம் சென்றார். நம்மையும் விண்ணகம் அழைத்துச் செல்ல மீண்டும் வருவார் என்று எதிர்நோக்கி காத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையே இயேசுவின் இரண்டாம் வருகையின் அடிப்படை. இயேசுவின் இரண்டாம் வருகையின் பொழுது, பாவிகள் பெரும் துயரையும், பாவமற்றவர்கள் இறைவனின் முடிவில்லா பேரின்ப மகிழ்வையும் பரிசாக பெறுவர். நாம் நம்முடைய பாவ வாழ்க்கையில் நாட்டம் கொண்டு, தொடர்ந்து பாவம் செய்வோம் எனில், இயேசுவின் இரண்டாம் வருகை நமக்கு கசப்பானதென்றாகும். இயேசுவின் இரண்டாம் வருகையை இன்பமாய் மாற்ற, நம் உடலில் தைத்துக் கொண்டிருக்கும் பாவ அழுக்குகளை அகற்றுவோம். இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம் உள்ளம் என்னும் ஆலயத்தை அழகு படுத்துவோம். எப்பொழுதும் விழிப்பாக இருந்து பாவத்திலிருந்து விலகி இருப்பதன் மூலம் நாம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பெரு மகிழ்வுடன் பங்கேற்போம் என்ற நம்பிக்கையுடன் இந்த மகிழ்வின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவன் இம்மண்ணுலகத்திற்கு  தம் மக்களை தீர்ப்பிட இறங்கி வருவார். அவர் வரும்பொழுது பாவம் செய்தவர்களையும், பாவம் மற்றவர்களையும் வெவ்வேறாகப் பிரித்து, அவர்களுக்கு தக்க பலன்களை அளிப்பார், என்று தனியேல் இறைவாக்கினரின் மூலமாக இறைவன் கூறும் செய்திகளை இம்முதல் வாசகத்தில் கவனமுடன் செவி கொடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்து பாவக்கழுவாய் பலியை நமக்காக நிறைவேற்றினார். பாவத்திலிருந்து மீட்பு பெற்ற நாம், நம்முடைய உள்ளங்களை, பாவத்தின் பிடியிலிருந்து மீட்டு, பாவக்கழுவாய் தேட அழைக்கப்படுகின்றோம். நம்மை பாவமில்லா வாழ்வை வாழ அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நிலை வாழ்வின் மேன்மையை எடுத்துரைத்த எம் இறைவா! உம் திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், உம்முடைய இரண்டாம் வருகைக்காக எங்களை தயார் செய்துவதற்கான அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. நேர்மை தவறாத எம் இறைவா! நாங்கள் சமுதாயத்திலும் எங்கள் வீடுகளிலும் வகிக்கும் பொறுப்புகளை முழுமன ஈடுபட்டுடன் ஆற்றவும், பிறருக்கு பயன் அளிக்கும் வகையில் வாழவும் வேண்டிய வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. விழிப்பாயிருக்கும்படி மொழிந்த எம் இறைவா! உம்முடைய இரண்டாம் வருகை எதிர்நோக்கி இருக்கும் நாங்கள் அனைவரும், எந்த நிலையிலும் பாவத்தின் சூழ்ச்சியில் சிக்காமல், உம்முடைய வருகைக்காக எங்கள் இல்லங்களையும், உள்ளங்களையும் தயார் செய்ய தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. இறைவாக்குரைத்த எம் இறைவா! நாங்கள் பெற்றுக் கொண்ட இறை நம்பிக்கையையும், படிப்பினைகளையும் எங்கள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய பொறுப்புணர்வையும், அதற்கான ஆற்றல்களையும் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! தொடர் கலவரங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மணிப்பூர் மாநில மக்களுக்காக மன்றாடுகின்றோம். அங்கு மீண்டும் எழுந்துள்ள மோசமான சூழ்நிலைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து, அமைதி நிலைநாட்ட வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF

Friday, November 8, 2024

பொதுக்காலத்தின் 32-ஆம் ஞாயிறு 10-11-2024

 பொதுக்காலத்தின் 32-ஆம் ஞாயிறு 10-11-2024


திருப்பலி முன்னுரை

இறை பகிர்வின் இனிய நிகழ்வில் பங்கேற்க வந்துள்ள சகோதர சகோதரிகளே! பொதுக்காலத்தின் 32-ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்தின் வாசகங்கள் அனைத்தும் அளித்தலின் மேன்மையை பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன.  இருப்பவற்றில் இருந்து கொடுப்பதை காட்டிலும், இருப்பதையெல்லாம் கொடுப்பதே முழுமையான பிறரன்பு பகிர்வாகும்.  நமக்கான செல்வங்களை இம்மண்ணுலகில் சேர்க்கும் பொழுது அவை அழிந்து போகும். நாம் சேர்க்கும் செல்வத்தை பிறருடன் பகிரும் பொழுது அவை விண்ணுலகில் உயரும்.  நாம் இம்மண்ணுலகில் புரியும் பாவங்களின் பொருட்டு, நமக்காக மரித்த இயேசு கிறிஸ்து, இறைவன் தன் மீது கொண்ட அன்பை நம் அனைவரோடும் பகிர்ந்து கொண்டார். நம்மையும் உன்னதமான இந்த பகிர்வின் வாழ்விற்கு  அழைக்கின்றார். நாம் பற்றி பிடிக்கும் பணம், பதவி, பட்டம் மற்றும் செல்வம் இவை எல்லாம் நம்மோடு நிலைத்து நிற்பதில்லை. எதிர்பார்ப்பின்றி பிறருக்கு செய்யும் நற்செயல்கள் மட்டுமே நம் ஆன்மாவிற்கு நன்மை பயக்கும். இன்றைய வாசகங்களில் இடம்பெறும் ஏழைப் கைம்பெண்கள் தங்களிடம் உள்ளதை எல்லாம் இறைவனுக்கு கொடுத்து, விண்ணகத்தை தங்களின் தாயகம் ஆக்குகின்றனர். இறைவனின் சீடர்களாகிய நாமும் இந்த ஏழைக் கைம்பெண்களை போல பகிர அழைக்கப்படுகின்றோம். இயேசு நம் பாவங்களின் பொருட்டு தன் உயிரையே நமக்காக அளித்தார். இவர்களைப் போல நாமும், நம்மிடம் உள்ளவைகளை பிறருடன் பகிர்ந்து கொண்டு விண்ணகத்தின் விழுமியங்களை கடைபிடிக்க வேண்டிய அருள் வரங்களை வேண்டி இந்த பகிர்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்

வாசக முன்னுரைகள்

முதல் வாசகம் முன்னுரை

இறைவாக்குறைக்கும் பணியில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்ட எலியா இறைவாக்கினர், தன்னுடைய இறைவாக்குரைக்கும் பணியை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் செயல்களின் மூலம் பகிர்வின் மேன்மையை நமக்கு விளக்குகின்றார். உணவின்றி வறுமையில் தவித்த ஏழைக் கைம்பெண்ணின் ஈகை பண்பை விளக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம் பாவங்களுக்காக இம்மண்ணுலகில் பிறந்து மரித்த இயேசு கிறிஸ்து, நம் அனைவருக்கும் தலைமை குருவாக இருக்கின்றார். தலைமை குரு நம் பாவங்களுக்காக பாவ கழுவாய் புரிவது போல, தன்னுடைய இறப்பின் மூலம் நம் அனைவருடைய பாவங்களுக்காகவும் பாவக்கழுவாய் புரிந்த இயேசு என்றும் நம் அனைவருக்கும் தலைமை குருவாய் விளங்குகின்றார் என்று மொழியும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்


மன்றாட்டுகள்

1. உம் எல்லையில்லா அன்பின் அடையாளமாக திரு அவையை ஏற்படுத்திய எம் இறைவா! உன் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், உம்மைப் போல தங்களிடத்தில் உள்ளது அனைத்தும் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் தாராள மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


2. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! போதிய உணவு, உடை, உறைவிடமின்றி வறுமையால் வாடும் அனைவரையும் அரவணைக்கும்படி மன்றாடுகின்றோம. இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டிய மனப்பக்குவத்தை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம். 


3. எங்களை அதிகமாய் அன்பு செய்யும் இறைவா! உலகெங்கும் வெவ்வேறு வழிகளில் உம்முடைய நற்செய்தி அறிவிப்பு பணியை, சமூக நல சேவைகள் மூலம் ஆற்றி வரும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளை தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்


4. குழந்தைகளை அன்பு செய்த எம் அன்பு இறைவா! எங்கள் வீடுகளில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பகிர்வின் மேன்மையை எங்களுடைய செயல்களால் எடுத்துச் சொல்லவும். பிறர் அன்பு பகிர்வின் பாதையில் அவர்களின் நன்முறையில் வளர்த்திட வேண்டிய ஞானத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. தலைமை குருவே எம் இறைவா! நீர் ஏற்படுத்திய நற்செய்தி பணியை இவ்வுலகில் தொடர்ந்து ஆற்ற, தேவையான இறை அழைத்தல்களை தந்தருள வேண்டுமென்றும், சிறப்பான முறையில் எங்கள் பங்கில் இறை அழைத்தலை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.

Friday, November 1, 2024

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு 03-11-2024

 

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு 03-11-2024

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு 03-11-2024


திருப்பலி முன்னுரை

உலகம் தோன்றியது முதல், இன்று வரை எண்ணற்ற வழிகளில் இறைவன்  தன்னுடைய அன்பை நம்மிடத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். தன்னுடைய அன்பின் அடையாளமாக, இவ்வுலகை படைத்து நம்முடைய ஆளுகைக்கு உட்படுத்தினார். இத்தகைய உயரிய மதிப்பை நமக்கு அளித்த இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது முழுமையான அன்பையே. இறைவன் தன்னுடைய அன்பை இறைவாக்கினர்கள் வழியாகவும், இறைமகன் இயேசு கிறிஸ்து வழியாகவும் இம்மண்ணுலக மாந்தர்க்கு போதித்தார். நாம் இறைவனின் அன்பை புறக்கணித்து அவரை விட்டு விலகிச் செல்லும் பொழுது தீய நாட்டத்தில் விழுகின்றோம். மனிதருக்குரிய  பண்பை இழக்கின்றோம். கடவுள் நம்மிடம் இருந்தும் எதிர்பார்க்கும் நொறுங்கிய நெஞ்சத்தை மாசுபடுத்துகின்றோம். நம் உள்ளத்தில் படிந்த கறைகளை களைவதற்காக இறைவன் அளித்த ஒரே வழி தான் இறையன்பும், பிறரன்பும். நாம் இறைவனை முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்யும் பொழுது அது நம்முடைய செயல்களின் வாயிலாக நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதுவே இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் இறையன்பும், பிறர் அன்பும் ஆகும். இறையன்பில்லாத பிறர் அன்பும், பிறர் அன்பில்லாத இறையன்பும் அர்த்தமற்றதாகும். ஏனெனில், கடவுளை நேசிப்பவர் அவரின் படைப்பாகிய மனிதர்களையும் நேசிக்க வேண்டும். ஆகவே இறைவன் திருச்சபையின் முதன்மையான கட்டளைகள் என்ற போதித்த இறையாட்சியின் படிப்பினைகளை நம் வாழ்வாக்க வேண்டி இந்த உறவின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுக்கும்.

 

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிப்பவர்கள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர்வடைவார்கள். ஏனெனில், இறைவனின் ஆற்றல் மிகு வார்த்தை நம்மை நன்மையின் பாதையில் வழி நடத்திச் செல்லும். இஸ்ரேல் மக்களை நன்மையின் பாதையில் நடத்தும் பொருட்டு இறைவாக்கினர் மோசே எடுத்துரைக்கும் இறைவாக்குச் செய்திகளுக்கு இம்முதல் வாசகத்தில் கவனமுடன் செவி  கொடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

நம்மைப் போல மனிதராக இம்மண்ணுலகில் பிறந்து உயிரினத்தை இயேசு கிறிஸ்து, சாவை வென்றதன் வழியாக நம்மில் இருந்து மேம்படுகின்றார். இதன் காரணமாக அவர் வாழும் கடவுளின் தலைமை குருவாக என்றென்றும் திகழ்கின்றார் என்ற மறைபொருளை விளக்கும் இரண்டாம் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவி கொடுப்போம்.

 

மன்றாட்டுகள்

 

1)       அன்பை அடித்தளமாகக் கொண்டு திருஅவையை கட்டி எழுப்பிய எம் அன்பு இறைவா! திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இறையன்பையும், பிறர அன்பையும் எவ்வித குறையும் இன்றி கடைபிடிக்க தேவையான அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள் வேண்டுமென்று உண்மை மன்றாடுகின்றோம்.

 

2)       உலகுக்கு உரு கொடுத்த எம் இறைவா! இவ்வுலகில் மக்களை வழிநடத்தும் அனைத்து தலைவர்களையும் நிறைவாக ஆசீர்வதியும் . இவர்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, மக்கள் மீது உன் அன்பு கொண்டு,  அவர்களை அன்பின் பாதையில் நடத்திட வேண்டிய வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

 

3)       ஆதரவற்றோருக்கு ஆதரவே எம் இறைவா! முழுமையான அன்பும், முறையான கவனிப்பும் இன்றி தவிக்கும் அனைத்து முதியோர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் தரவேண்டிய பொறுப்புணர்வை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

4)       திருக்குடும்பத்தின் சுடரொளியை எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அன்பு செய்தல், விட்டுக்கொடுத்தல் கீழ்ப்படிதல் போன்ற திருக்குடும்பத்தின் படிப்பினைகளை பின்பற்றவும், அதன் மூலம் எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதி நிலவவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

5)       அழியும் செல்வமான இம்மன்னக செல்வத்தின் மீது நாட்டம் கொள்ளாமல், நிலையான செல்வமாகிய விண்ணகச் செல்வத்தை உடைமையாக்கி கொள்வதற்கான வழி ஆகிய அன்பை நாங்கள் இறுகி பற்றி கொள்ளவும். பிறர அன்பு பணிகளில் அதிகமாக ஈடுபடவும் வேண்டிய தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF


இறந்த விசுவாசிகள் அனைவர் நாள் – நவம்பர் 02

இறந்த விசுவாசிகள் அனைவர் நாள் நவம்பர் 02

இறந்த விசுவாசிகள் அனைவர் நாள் – நவம்பர் 02

திருப்பலி முன்னுரை

  1. இறைவன் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் முடிவில்லா வாழ்வை தமதாக்கி கொள்வார்கள் என்ற நம்பிக்கையை கொண்ட சகோதர, சகோதரிகளே! இன்றைய நாளில், நாம் அனைவரும், இறந்த ஆன்மாக்களை நினைவு கூறவும், அவர்களுக்காக சிறப்பான முறையில் ஜெபிக்கவும் அழைக்கப்படுகின்றோம். மனிதன் செய்த முதல் பாவத்தின் விளைவாக இவ்வுலகத்தில் பாவமும், சாவும் நுழைந்தது. அப்படி பாவத்தில் விழுந்த மனிதர்களை சாவின் பிடியில் இருந்து மீட்பதற்காக, இறைமகன் இயேசு கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் பிறந்து, எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். இறுதியாக, சிலுவை மரணத்தின் மூலம் பாவத்தின் பிடியில் சிக்கிய மனிதனை மீட்டெடுத்தார். பாவமில்லா வாழ்வு வாழ்ந்ததன் அடையாளமாக விண்ணக வீட்டிற்கு ஏறிச் சென்றார். இயேசு கிறிஸ்து இம்மண்ணுலகில் வாழ்ந்த பொழுது, இறையன்பு, பிறரன்பு, இறைத் திருவுளத்தை நிறைவேற்றல் ஆகிய இறையாட்சியின் விழுமியங்களை முற்றிலுமாக பின்பற்றினார். அதன் நிறைவாக, பாவத்திலிருந்தும் மீண்டு நித்திய வாழ்வை நமதாக்கிக் கொள்ள முடியும் என்று முன்மாதிரி வாழ்வு வாழ்ந்து காட்டினார். அவருடைய சீடர்களாகிய நாமும் அவருடைய வழியை பின்பற்றுவதன் வழியாக நித்திய வாழ்வை நம்முடையதாக்கிக் கொள்ள முடியும். இந்த நித்திய வாழ்வை அடைவதற்காக ஏங்கும் ஒவ்வொரு ஆன்மாவுக்காகவும் இத்திருப்பலியில் செபிப்போம். அதிலும் குறிப்பாக, யாரும் நினையாத ஆன்மாக்களை நினைவு கூறுவோம்! அனைத்து அன்மாக்களும் நித்திய இளைப்பாற்றியை அடைய வேண்டிய வண்ணம் இத்திருப்பலியில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வோம்.

 

முதல் வாசக முன்னுரை

பஞ்சம், போர்கள் மற்றும் இயற்கை சீற்றம் என்ற பல்வேறு காரணிகளால் இஸ்ரேல் மக்கள் பல திசைகளில் சிதறடிக்கப்பட்டனர். பலர் தங்கள் உயிரை இழந்தனர். நம்பிக்கை இழந்த மக்களை தேற்றுவதற்காகக இறைவாக்கினர் எலியா மூலம் இறைவன் எடுத்துரைக்கும் செய்திகளை இம்முதல் வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து, பாவத்தின் மீது ஆளுமை செலுத்தி சாவினை வெற்றி கொண்டார். இறந்த இயேசு கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். இறைவன் மீது நம்பிக்கை கொள்ளும் அனைவரும் பாவத்திலிருந்து மீண்டு, சாவினை வெற்றி கொள்ள முடியும் என்றும், நித்திய வாழ்வை நமது ஆக்கிக் கொள்ள முடியும் என்றும் ஊக்கம் அளிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

 

மன்றாட்டுகள்

 

1.   திருஅவையின் தொடக்கம் முதல் இன்று வரை இயேசுவின் படிப்பினைகளின் பொருட்டு உயர்நீர்த்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் செபிக்கின்றோம். இவர்கள் அனைவருக்கும் நித்திய  இளைப்பாற்றியை அளித்துள்ள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
 
2.   இறந்தோரை உயிர்பெற்ற எழுச்செய்த எம் இறைவா! எங்களுடைய இல்லங்களில் இறந்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். இவர்கள் இவ்வுலகில் செய்த பாவங்களை மன்னித்து, உம்முடைய பேரின்ப வீட்டின் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
 
3.   போர்களிலும், போராட்டங்களிலும் பிறருக்காக உயிர் நீத்த தியாக உள்ளங்களுக்காக மன்றாடுகின்றோம். பிற நலனுக்காக உயிர் நீத்த இவர்களின் ஆன்மாக்களை நாங்கள் என்றென்றும் நினைவு கூர்ந்து, அவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் உணர்வை எங்களுக்கு தந்துருள்ள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
 
4.   எங்கள் பாவங்களுக்காக உயிர் நீத்த எம் இறைவா! சிலுவை மரணத்தின் மூலம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு நாங்கள் அனைவரும், மென்மேலும் பாவங்களை செய்யாமல் எங்களுடைய ஆன்மாக்களை காத்துக்கொண்டு, நித்திய வாழ்வை நோக்கி பயணிக்கும் அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
 
5.   இம்மண்ணில் வாழும் மனிதர்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்விற்கு ஒரு முடிவு உண்டு என்பதை உணர்ந்து, நாங்கள் வாழும் நாட்களில் எங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்தும், பிறர் எங்களு செய்த உதவியை நினைவுகூர்ந்தும்  வாழ வேண்டிய வரங்களை தந்தருள் வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்
 

To download pdf

 

Thursday, October 24, 2024

பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு 27-10-2024

பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு 27-10-2024

பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு 27-10-2024

திருப்பலி முன்னுரை

நம்மிடத்தில் உள்ள குறைகள் தான், நாம் நிறைவுள்ள இறைவனோடு ஒன்றிணைவதற்கான முதன்மையான காரணம். வளமையான வாழ்வு வாழ்பவர்களின் பக்கத்தில் இறைவன் இருப்பதை விட, வலி நிறைந்த வாழ்க்கையை வாழ்பவர்களின் உள்ளத்தில் இருக்கின்றார் என்பது நிதர்சனம். நம் வாழ்வில் நாம் வலிகளை சந்திக்கின்றோம் என்றால் இறைவன் நம் உள்ளத்தில் குடி கொண்டுள்ளார் என்று பொருள் கொள்ளலாம். ஏனெனில், நம்மிடத்தில் உள்ள குறையை நிறைவு செய்ய, இறைவனே நேரடியாக நம்மை தேடி வருகின்றார். இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைப்பது போல இறைவன்தாமே நலிவுற்றவர்களின் ஆதரவாக இருக்கின்றார். உடலளவிலும், உள்ளத்தளவிலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இயேசு கிறிஸ்து குணமளிக்கின்றார். நம் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள குறையை மற்றவரிடத்தில் உள்ள நிறைவை வைத்து சரிசெய்து செய்ய வாழ்வில் நிறைவுகாண இறைவன் நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றார். பார்வையற்றோர், முதியோர் மற்றும் இயல்பான வாழ்க்கையை வாழ இயலாதவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய இறைவன் நம்மை அழைக்கின்றார். இந்த அழைப்புக்கு நம்மையே நாம் தகுதி ஆக்கிக் கொள்வதற்கு நாம் உறுதியான இறை நம்பிக்கை பெற்றவர்களாக இருக்க வேண்டும். எனவே, இயேசுவைப் போல இயலாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்யும் மனதையும், அதற்கு தேவையான ஆழ்ந்த இறை நம்பிக்கையும் வேண்டி இந்த அன்பின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம். 

வாசக முன்னுரைகள் 

முதல் வாசகம் முன்னுரை 

இறைவாக்கினர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படும் இறைவாக்கினர் எரேமியா, இஸ்ரேயலிருந்து சிதறடிக்கப்பட்ட இஸ்ரேல் மக்கள் பெருங்கூட்டமாய் இறைவனை நோக்கி வருவர் என்றும், அவர்களில் பார்வையற்றோரும், கால் ஊனமுற்றோரும், கருவுற்றோரும், பேருகால பெண்களும் அடங்கி இருப்பர் என்று இறைவாக்குரைப்பதை இம்முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை 

திருமுழுக்கு பெற்ற நம் அனைவருக்கும் வழங்கப்பட்ட அழைத்தல் வாழ்வானது நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. இறைவனே, தன்னுடைய இறைபணியை ஆற்றுவதற்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றார். அவ்வகையில் தன்னுடைய பணியை செய்ய இறைமகன் இயேசு கிறிஸ்துவை இறைவன் அழைத்தார் என்ற கூற்றை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 


மன்றாட்டுகள்


1. சிதறிய உள்ளங்களை சீர்படுத்தும் எம் இறைவா! மனதளவில் காயப்பட்ட உம்முடைய பிள்ளைகளாகிய எங்களை நிறைவாக ஆசீர்வதியும் , பார்வையற்ற பார்த்தல்மேயோவின் கண்களுக்கு ஒளி தந்து ஆசீர்வதித்ததை போல, நொறுங்கி எங்கள் உள்ளங்களை சீரமைத்து ஒளிதர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 


2. வழிநடத்தும் எம் இறைவா, எங்களை வழி நடத்தும் திரு அவை  மற்றும் அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். தங்களுக்கு அளிக்கப்பட்ட பதவியை பிறருக்கு பணி செய்ய கிடைத்த வாய்ப்பாய் கருதி பணியாற்றிட தேவையான வரங்களைத் இவர்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. காயப்பட்ட ஆடுகளை தேடிச் செல்லும் இறைவா! சமூகத்தில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், நாங்கள் உதவியாக இருக்கவும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கும் எங்களுக்கு தேவையான வரங்களை தந்துள்ள வேண்டும் என்று உண்மை மன்றாடுகின்றோம்.


4. தேடிச் சென்று உதவும் இறைவா! பல்வேறு பிரச்சனைகளால் காப்பகங்களில் இருக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை நாங்கள செய்;யவும், எங்கள் இல்லங்களில் உள்ள குறைபாடுள்ளவர்களை நன்றாக கவனித்து கொள்ளதற்கும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. துன்புறும் ஊழியனே எம் இறைவா ! பேரிடர் காலங்களிலும், மற்ற ஆபத்து நேரங்களிலும் மீட்பு பணியில் ஈடுபடும் அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் புரியும் வேலைகள் நீரே இவர்களுக்கு பாதுகாப்பு அளித்து, அவர்களுக்கு எவ்வித் ஆபத்தும் நேரிடாதபடி காத்தருள் வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


Thursday, October 17, 2024

பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு 20-10-2024

பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு 20-10-2024

பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு 20-10-2024

திருப்பலி முன்னுரை

மன்னக மாந்தரின் பாவங்களைப் போக்க தம் இன்னுயிர் தந்த இயேசுவைக் காண இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் 29-ஆம் ஞாயிறு திருவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நம்மை தாழ்ச்சியுள்ள நல்ல தொண்டனாக வாழ அழைக்கின்றது. விண்ணகத்தில் இறைவனுடன் இருந்த இறைமகன் நம் அகத்தை சீரமைப்பதற்காய் இம்மண்ணகத்தில் பிறந்தார். கிறிஸ்து இறைவனாக இருந்த போதிலும் இறைவனுக்குரிய பண்புகளை மட்டும் பற்றிக்கொள்ளவில்லை. மனிதராக பிறந்து அனைத்து சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டார். அவர் பாவம் ஏதும் செய்யவில்லையென்றாலும், நம்முடைய பாவங்களுக்காக துன்புற்று, துன்புறும் ஊழியனாக திகழ்ந்தார். உலகையே ஆள நினைத்த பல அரசரகள் மணிமுடி சுமந்து ஆட்சி செய்தனர், தங்கள் அரியணையை இழந்தனர். நம்முடைய கிறிஸ்து அரசரோ முள்முடி சூடி, இவ்வுலகை இன்றும் ஆட்சி செய்கின்றார். இதற்கு காரணம் இயேசுவின் தாழ்ச்சியும், பிறரன்பு நேசமுமே. இயேசவின் சீடர்களாகிய நாம் அனைவரும் தலையேழு புண்ணியங்களில் ஒன்றான தாழ்ச்சி என்ற நற்குணத்தை அடையாக அணிய அழைக்கப்படுகின்றோம். பிறரன்பும், தாழ்ச்சியும் இருக்கும் இடத்தில் பெரியவர் சிறியவர், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற எந்த பாகுபாடும் இருக்காது. எனவே. இறைவனின் அருளைப் பெற, தாழ்ச்சியை நமதாக்க இந்த உன்னத கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்;.

வாசக முன்னரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவன் இறைமக்களை பாவத்தின் பிடியிலிருந்து மீட்டு இறைப்பாதையில் நடத்திட எண்ணற்ற முயற்சிகளைச் செய்தார். பல இறைவாக்கினர்களை மக்களிடையே அனுப்பினார். அவ்வாறு அனுப்பப்பட்ட இறைவாக்கினர்கள் இறைவனின் துன்புறும் ஊழியனாக இருந்து மக்களை பாவத்திலிருந்து எவ்வாறு மீட்டார்கள் என்பதை விளக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மனிதராக பிறந்த இயேசு கிறஸ்து நம்மைப் போல பல வகைகளில் சோதிக்கப்பட்டார். ஆனால், அவர் நம்மைப்போல பாவம் ஏதும் செய்யவில்லை. இரக்கமும், பரிவும் கொண்ட நம் இறைவன் நமக்கெல்லாம் தலைமைக் குருவாக இருக்கின்றார். நம் பாவங்களுக்காக உயீர் நீத்த நம் இறைவன், நம்மை புதுவாழ்வு வாழ அழைக்கின்றார். புதுவாழ்வு பெறும் ஆவலுடன் இவ்விரண்டாம் வாசகத்தை பக்தியுடன் கவனிப்போம்.


மன்றாட்டுகள்

1. பாவிகளைத் தேடிச் சென்று மீட்ட எம் அன்பு இறைவா! நீர் ஏற்படுத்திய பிறரன்பு பணிகளை, தொண்டருக்கெல்லாம் தொண்டாராக இருந்து இன்று வரை ஆற்றி வரும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காவும் மன்றாடுகின்றோம். நற்செய்தி அறிவிப்பிலும், இறை சேவை புரிவதிலும் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் எங்களுடன் இருந்து எங்களை வலுப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்


2. தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! எம் மக்களை ஆளும் தலைவர்களும், அதிகாரிகளும் தாங்கள் மக்களின் பணியாளர்கள் என்பதை முழமையாக உணர்ந்து, மக்களின் நல்ல சேவகர்களாக செயல்படவும், மக்களுக்கு தேவையான அரோக்கியமான திட்டங்கனை இயற்றவும் தேவையான உள்ள அற்றலை தந்தருன வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. உழைப்பின் உயர்வை அறிந்த எம் இறைவா! கடினமாக உழைத்து இந்த சமுதாயத்தின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் எங்களுடைய பணியில் ஈடுபடும் பொழுது எந்தவித துன்பங்களும் எங்களை நெருங்காதபடியும், நாங்கள் பணியை சிறப்புடன் ஆற்ற தேவையான ஆற்றலையும் தந்தருளு வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


4. இயற்கையை ஆளகை புரியும் எம் இறைவா! இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பவும், இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் அறிவையும், இயற்கையின் போக்கை புரிந்து கொண்டு நாங்கள் அனைவரும் இயற்கையினை சேதபடுத்தாமல் இருக்க வேண்டிய பொறுப்பையும் எங்களுக்கு தந்தருளு வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. எங்களுக்கு எல்லாமுமான எம் இறைவா! செபமாலைக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த மாதத்தில் நாங்கள் எடுக்கும் பக்தி முயற்சிகள் அனைத்திலும்; உம் ஆசீரை பொழிந்தருள வேண்டுமென்றும், நாங்கள் எழுப்பும் மன்றாட்டுகளுக்கு செவிசாய்த்து எங்கள் ஆன்மீக வாழ்வில் நாங்கள் மென்மேலும் வளர அருள்புரிய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.



பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு 20-10-2024


உண்மையாக உழையுங்கள்

ஊதியத்திற்காக அல்ல, ஊழியத்திற்காக


To Download Pdf

**Thirupali Munnurai**

**Mass Introduction**

**Sunday**

Wednesday, October 9, 2024

பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு - 13-10-2024

 பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு - 13-10-2024

பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு - 13-10-2024

திருப்பலி முன்னுரை

    இறைவன் அளிக்கும் ஞானத்தை இன் முகத்துடன் பெற்றுச் செல்ல இவ்விறைப்பிடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! பொதுக்காலத்தின் 28-ஆம் ஞாயிறு வழிபாட்டு கொண்டாட்டத்தின் வாசகங்கள் அனைத்தும், நிலையான செல்வமாகிய, இறைவன் அளிக்கும் ஞானத்தை பற்றிக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றது.  இறைவன் ஒருவரே நிறைவுள்ளவர் என்பதே அந்த ஞானம். மனிதர்களாகிய நாம், மண்ணக பார்வையில் செல்வர்களாக இருந்தால், விண்ணகத்தை நமதாக்க முடியாது. ஏனெனில், செல்வம் இருக்கும் இடத்தில் செருக்கும் இருக்கும், செருக்கு மிகுந்த உள்ளத்தில் இறைவன் வாழ்வதில்லை. தாழ்ச்சியான, எளிமையான, ஏழைகளின் உள்ளத்தில்தான் இறைவன் வாழ்கின்றார்.  அப்படி கடினப்பட்ட உள்ளத்தை கரைப்பதற்காக இறைவன் அளித்த அமுத வழி தான் இறைவா வார்த்தையின் படி வாழ்வது. கடவுளுடைய உயிருள்ள வார்த்தையை உள்வாங்கி, தியானித்து, அதை நம் வாழ்வாக்கும் பொழுது, செருக்கு மிகுந்த நம் உள்ளம் இறைவன் வாழக்கூடிய சிறந்த இல்லமாக மாறும். மண்ணக மாந்தர்களை மகிழ்விக்க நாம் செல்வங்களை சேர்த்தால், விண்ணகம் சென்றடைய முடியாது, விண்ணகவேந்தரான இறைவனின் வார்த்தையின் படி வாழும் பொழுது இறை ஞானம் பெற்று விண்ணகத்தை நமதாக்கிக் கொள்வோம். எனவே, நாம் விண்ணகத்தில் குடிகொள்ளவும், இறைவன் நம் அகத்தில் குடிகொள்ளவும் நம்மை தயார் செய்யும் இந்த உன்னத கொண்டாட்டத்தின் பக்தியுடன் பங்கெடுப்போம்.


வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

    பொன்னை விடவும், போர் கருவிகளை விடவும் ஒரு நாட்டை ஆள்வதற்கு தேவையானது ஞாணமே என்பதை உணர்ந்த அரசர் சாலமோன், இறைவனிடத்தில் ஞானத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அதை மன்றாடிக் கேட்கும் வார்த்தைகளை தாங்கிய இம்முதல் வாசகத்திற்கு  கவனமுடன் சொல்லிக்கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

    தொடக்கத்தில் வாக்காக இருந்த கடவுள், மனிதராய் தோன்றி இறை மக்களிடத்தில் இறைவாக்கு உரைத்தார். இறைவன் தன்னுடைய படைப்புகளின் மூலமும் இறைவார்த்தைகளின் மூலமும் தன்னை வெளிப்படுத்துகின்றார். இறைவன் அருளிய அந்த வார்த்தைகளின் ஆழத்தையும், அதன் மேன்மையையும் எடுத்துக் கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவி கொடுப்போம்.


மன்றாட்டுகள்

1.   ஏழைகளைத் தேடிச் சென்ற எம் இறைவா! விளிம்பு நிலை மக்களை தேடிச் சென்று தேற்றும் உன் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இயலாதவர்களுக்கு இவர்கள் செய்யும் உதவியை மன்மேலும் சிறப்பாக ஆற்றிட தேவையான உதவிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2.   தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளிலும், மக்களுக்கு உபயோகமற்ற திட்டங்களிலும் எம் நாட்டுத் தலைவர்கள் பணத்தை வீணடிக்காமல், தொலைநோக்குடைய நல்ல திட்டங்களை தீட்டி, மக்களின் வாழ்வை உயரச் செய்ய தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3.   நொருங்கிய உள்ளத்தை பலியாக கேட்ட எம் இறைவா! பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்ற உள்ள அழக்குகளை அகற்றி, எங்கள் இல்லங்களை நாங்கள் அலங்கரிப்பது போல, எங்கள் உள்ளங்களையும் அலங்கரிக்கும் வரம் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.

4.   இன்னலிலும் இறைவாக்குரைத்த எம் இறைவா! வேத போதக நாடுகளில் எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் உம் இறை வார்த்தையை எடுத்துரைக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுடைய இன்னல்களை நீர்தாமே துடைத்து தருள வேண்டுமென்று, அவர்கள் செய்யும் பணியில் அவர்கள் நிறைவு காண வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5.   வார்த்தைக்கு வாழ்வளிக்கும் எம் இறைவா! இறைஞானம் பெற இறைப்பிடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும், பிறரன்பு பகிர்வில் வெறும் சொல் வீரர்களாய் மட்டும் இல்லாமல், செயல் வீரர்களாய் இருந்து, பிறரன்பு பணியில் ஈடுபட்டு இறைஞானத்தை எமதாக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...